
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஒரு இளைஞருக்காக இரண்டு பெண்கள் சாலையில் சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனகாப்பள்ளி பகுதியில் இளைஞர் ஒருவருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதைப் பார்த்த மற்றொரு பெண், அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதனால் இருவரும் சாலையில் குடுமியைப் பிடித்துக்கொண்டு சண்டையிட்டனர். சண்டை உச்சக்கட்டத்திற்கு சென்றபோது இருவரும் மாறி மாறி சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிகள் என்பது தெரியவந்தது. இருவரையும் எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், சம்மந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.