Skip to main content

சூட்கேசில் கிடந்த பெண்ணில் உடல்; விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

truth that came out in the investigation A woman's at suitcase

 

மும்பை குர்லா பகுதியில் உள்ள சாந்தி நகரில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.டி. சாலையிலும், மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலையில் இருந்தே சி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. அதனைக் கவனித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அந்த சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில், ஓர் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

 

இதையடுத்து, இறந்த பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்டவை கண்டுபிடிக்க சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும், பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டனர். 

 

இந்த நிலையில், பெண் ஒருவர் போலீசாரை தொடர்பு கொண்டு, பிணமாக மீட்கப்பட்டவர் தனது சகோதரி என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதிமா கிஸ்பட்டா (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த காதலன் அக்சர் மனோஜ் (21). என்பவருடன் தாராவி குடிசைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

 

இதனையடுத்து, அக்சர் மனோஜை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் தானே பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிணமாக கிடந்த பிரதிமா கிஸ்பட்டா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அக்சர் மனோஜ் இனிப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில், காதலி பிரதிமா கிஸ்பட்டா நடத்தையில் அக்சர் மனோஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 18ஆம் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அக்சர் மனோஜ், காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்று அதன் உடலை சூட்கேசில் அடைத்துள்ளார். அதன் பின்னர், அந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து ஏறி உடலை சாலையோரம் வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. கைதான அசோக் மனோஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.