Skip to main content

"சில தவறான முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கலாம் ஆனால்" - எஃப்ஐசிசிஐ கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

amit shah

 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று உரையாற்றினார். அப்போது அவர், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறும் எனக் கூறியுள்ளார்.

 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஆண்டு பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியது வருமாறு...

 

சில தவறான முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கலாம் ஆனால் எங்களின் நோக்கம் தவறானது அல்ல. கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். எங்கள் அரசாங்கத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. 60 கோடி மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல், மின் இணைப்பு, எரிவாயு இணைப்புகள் இல்லாமல், சுகாதார வசதிகள் கிடைக்காமல் இருந்தனர்.  மோடி அரசு இவை அனைத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமையாலும், நாட்டின் 130 கோடி மக்களின் பங்கேற்பின் காரணமாகவும் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்தம் சிந்தாமல் நீக்கப்படும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இராம ஜென்ம பூமி பிரச்சனை அமைதியாக தீர்க்கப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. இடதுசாரி தீவிரவாதம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது, சுகாதார உள்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது, மேலும் அடுத்த 100 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு ஒரு நீர்க் கொள்கை கூட வகுக்கப்பட்டுள்ளது.

 

மோடி அரசால் தொடப்படாத பகுதி ஒன்று கூட இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு அரசாங்கம் 50 ஆண்டுகளில் நான்கிலிருந்து ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆனால் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தது 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 155 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் மற்றும் உற்பத்தியில் வேகம் ஏற்பட்டுள்ளது, மேலும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து வலுவான பொருளாதார நடவடிக்கைகளுடன் வெளி வந்த நாடு என்றால் அது இந்தியாதான். பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இது நடந்துள்ளது.

 

கரோனா பரவலின்போது  அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல கொள்கை முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சியில் நேர்மறையான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறும். நமது பொருளாதார வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கத்தை அடைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். பணவீக்கம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 4-6% என்ற இலக்கு வரம்பிற்குள்தான் உள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; டெல்லியில் பா.ஜ.க. முக்கிய ஆலோசனை!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Parliamentary elections approaching; BJP in Delhi Important advice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.