Skip to main content

முதலில் ரூ.50 கோடியைத் திருப்பிச் செலுத்துங்கள்... கடன் கேட்ட டீக்கடைக்காரரை உறையவைத்த வங்கி...

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

tea-seller applies for loan, bank gives him notice to repay Rs 50 crore

 

டீக்கடைக்காரர் ஒருவர் கடன் கேட்டு வங்கியை அணுகியபோது, ஏற்கனவே உள்ள கடன் ரூ.50 கோடியைச் செலுத்தக்கூறி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

 

ஹரியானாவின், குருக்ஷேத்ராவில் தேநீர் விற்பனை செய்துவரும் ராஜ்குமார் என்பவர், கரோனா வைரஸ் பரவலால் தொழில் முடங்கியுள்ளதால் கவலையில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது கடையை மீண்டும் துவங்குவதற்குப் பணம் தேவை என்பதால், கடன் பெற அப்பகுதியில் இருக்கும் ஒரு வங்கியை அணுகியுள்ளார். ஆனால், கடனுக்கான அவரது விண்ணப்பத்தை வங்கி நிராகரித்துள்ளது. இதனால் வேதனையடைந்த ராஜ்குமார், எதற்காகக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என வங்கியில் விசாரிக்க முற்பட்டுள்ளார்.

 

அப்போது அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஒன்றில், அவர் ஏற்கனவே அந்த வங்கியில் ரூ.50 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்துள்ள ராஜ்குமார், இதுகுறித்து பேசுகையில், "கரோனா காரணமாக எனது நிதி நிலைமை மோசமாக இருப்பதால் நான் கடனுக்காக விண்ணப்பித்தேன். ஆனால், நான் ஏற்கனவே ரூ .50 கோடி கடன் வைத்திருக்கிறேன் என வங்கி கூறுகிறது. இது எப்படிச் சாத்தியம் என எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்