
சிறையில் இருந்து விடுதலையான நபர், சிறை வாசலிலேயே போலீசார் முன்பு நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரேதச மாநிலம் சிப்ரமாவ் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவா. ஒரு தாக்குதல் வழக்கில் கைதான இவருக்கு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஷிவாவுக்கு குடும்பம் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி யாரும் முன் வரவில்லை. இதனால், ஷிவா கடந்த 11 மாதம் சிறையில் இருந்தார். இதையறிந்த என்.ஜி.ஓ ஒன்று இலவச சட்ட உதவி மூலம் ஷிவாவுக்கு ஜாமீன் தொகையை கட்டி அவரை வெளியேறச் செய்தது.
இதனையடுத்து, 11 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்த ஷிவா, வெளியே வந்த போது திடீரென நடனமாடினார். அவர் நடனமாடுவதை பார்த்த அங்கிருந்த காவலர்களும், சிறை அதிகாரிகளும் புன்னகையுடன் ரசித்து பார்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படிப்பறிவில்லாத ஷிவா, சிறையில் இருந்த காலத்தில் தனது பெயரை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். சிறையில் இருந்து வெளியேறிய ஷிவா, இனி ஒருபோதும் குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்தார். மேலும், தனக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்ததற்காக சிறைக் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.