![heart treatment](http://image.nakkheeran.in/cdn/farfuture/hrAQAvTg6y4tBRFb5SwzXQwxQll5u0HgesGJpKaEoDQ/1535112944/sites/default/files/inline-images/Akshaya_KeralaFloodsDonor_HeartSurgeryKid_750.jpg)
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000 கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.
இந்த வெள்ள சேத பாதிப்புகளை டிவியில் பார்த்த கரூர் குமாரபாளையம் தான்தோனிமலை கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அக்ஷ்யா தன் இதய அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த 20 ஆயிரம் பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் தாய் ஜோதிமணி கூறுகையில்,
ஆறு வருடத்திற்கு முன் அக்ஷுயாவின் அப்பா இறந்துவிட்டார். அக்ஷ்யா அவளது சகோதரிகள் நான் உட்பட அனைவரும் எனது அம்மா வீட்டில்தான் இருந்து வருகிறோம். அக்ஷ்யா பிறக்கும்பொழுதே இதய குறைபாட்டோடு பிறந்தாள் அவளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் அவள் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் கடந்த 2017-ஆம் நவம்பர் மாதம் முதல் இதய அறுவை சிகிச்சை முடிந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கான தொகையை முகபுத்தக்கம் மற்றும் நண்பர்கள் மூலம் கிடைத்த 3.5 லட்சத்தை வைத்து செய்து முடித்தோம். அதேபோல் இரண்டாம்கட்ட அறுவை சிகிச்சை வரும் நவம்பர் மாதம் செய்ய இருக்கிறோம் ஆனால் அக்ஷ்யா கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கை டிவியில் பார்த்துவிட்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள் சேர்த்துவைத்த தொகையில் இருந்து எங்களால் முடிந்த இந்த தொகையை அளித்துள்ளோம் என கூறினார்.