Skip to main content

ஆர்.சி.பி பேரணி விவகாரம்- முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

Published on 07/06/2025 | Edited on 07/06/2025
rcb

17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள், மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் அவசரமாக ராஜினாமா செய்துள்ளனர். தங்களுடைய ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்குமாறு சங்க தலைவருக்கு செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தில் இந்த சம்பவத்தில் எங்களுடைய தவறு மிகச்சிறியது என்றாலும் தார்மீக பொறுப்பேற்று தாங்கள் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்