Skip to main content

‘பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்’ - மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரிக்கை! 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

‘Government should accept the entire tuition fees of backward and very backward students’ - People's Rights Federation demand!


புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டுமென மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேற்று (06.01.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

 

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. இதற்கான கோப்புகளை மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பிவைத்தார். இதற்கு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

 

இதன்படி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணம், டியூஷன் கட்டணம், ஆய்வகம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் என முழுவதையும் அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ரூ.42 கோடி ஒதுக்கப்பட உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் ஏற்றத்திற்கான இத்திட்டத்தை மனதார வரவேற்கிறோம். 

 

இதேபோல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

 

எனவே, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றதுபோல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

 

இல்லையேல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி இக்கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்