Skip to main content

மோடிக்கு எதிராக ராகுல் காந்தி உருவாக்கும் மெகா கூட்டணி - அதிர்ச்சியில் பா.ஜ.க.

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

- தெ.சு.கவுதமன்

 

 Rahul Gandhi's mega alliance against Modi- BJP in shock

 

இன்றைய தினம் (ஏப்ரல் 13, 2023) காங்கிரஸ் தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்களும் சந்தித்துப் பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது! 2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பா.ஜ.க.வை எதிர்கொள்வதில் இணக்கமான சூழல் வரவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஈகோ இருக்கிறது. பிரதமர் பதவி மீது எந்த ஆசையுமில்லாமல், 'பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்... அதற்கான கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும்' என்று தமிழ்நாடு முதல்வர் எழுப்பும் குரலுக்கு, மற்ற தலைவர்களிடமிருந்து சரியான வரவேற்பு இல்லை. இப்படியாகத்தான் எதிர்க்கட்சிகள் சிதறு தேங்காயாக இருப்பதால், பா.ஜ.க.வின் வெற்றி இம்முறையும் எளிதாகக் கிடைக்குமென்றே தெரிந்தது.

 

இந்த நிலவரத்தை மாற்றும் முனைப்போடு, இம்முறை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். முதலில் தங்களோடு ஓரளவு ஒத்த சிந்தனையோடிருக்கும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். அதன் காரணமாக இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சல்மான் குர்ஷித், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேரங்களைத் தாண்டி பா.ஜ.க.வுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்து மனந்திறந்து பேசினார்கள்.

 

பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை விரிவுபடுத்துவதை கூடுமானவரை சாத்தியப்படுத்திவிட்டால் அதன்பின்னர் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டுமென்றும், மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் மோசமான செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வீழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும் நம்பிக்கையோடு பல்வேறு வகை ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

 

 Rahul Gandhi's mega alliance against Modi- BJP in shock

 

கூட்டம் நேர்மறை உணர்வுகளோடு முடிந்த கையோடு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, "இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வரவுள்ள தேர்தலை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு சந்தித்துப் பேசியுள்ளோம்" என்று தெரிவித்தார். ராகுல் காந்தி கூறுகையில், "நாங்கள் இங்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். இக்கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலை எதிர்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்" என்று அறிவித்தார்.

 

கூட்டம் முடிவடைந்ததும் சூட்டோடு சூடாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் சந்தித்துப் பேசினார்கள். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்களும் இவர்களோடு இணைந்து செயல்படவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதன்மூலம் இம்முறை எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பு நம்பிக்கைக்குரிய திசையில் பயணிப்பதாகத் தெரிகிறது. இது பா.ஜ.க. தலைமைக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.