Skip to main content

“இப்படிப்பட்ட தலைமையா மணிப்பூருக்கு தேவை?” - பிரியங்கா காந்தி கேள்வி

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Priyanka Gandhi Questioned Is this the kind of leadership Manipur needs?

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், சில மாவட்டங்களில் மட்டும் அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. 

ஆனாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில், மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலர், புத்தாண்டு தினமான நேற்று முன் தினம் (01-01-24) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திடீர் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊரடங்கு அமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெளபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பைரங் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மணிப்பூர் வன்முறை குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “மணிப்பூர் மாநிலத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த 8 மாதங்களாக வன்முறை, கொலை மற்றும் அழிவை பார்த்து வருகின்றனர்.

எப்போதுதான் இந்த வன்முறை ஓயும். மணிப்பூரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள்  டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து பேசுவதற்கு நேரம் கோரினர். ஆனால் இன்று வரையிலும் பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு முன்வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவும் இல்லை, மணிப்பூரை பற்றி பேசவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்படிப்பட்ட தலைமையா மணிப்பூருக்கு தேவை?. அரசு இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தை உறுதியான நடவடிக்கை எடுத்து வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அமைதியை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது” - மஹுவா மொய்த்ரா எம்.பி!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Mahua Moitra MP talks about manipur issue in loksabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.

இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார்.  இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (01.07.2024) உரையாற்றினார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரையாற்றுகையில், “மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு. கடந்த முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் உங்கள் 63 உறுப்பினர்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்” எனப் பேசினார். கடந்த முறை எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் மஹூவா மொய்த்ரா நடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவந்து மக்களவையில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடர் கனமழை; இடிந்து விழுந்த பாலம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Continuous heavy rain Collapsed bridge

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதே போன்று டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 10 சேதம் அடைந்துள்ளது. அதோடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பீகாரில் 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.