Skip to main content

மாணவர்கள் அயல் நாடு அலைய வேண்டாம்! கல்வியை இறக்குமதி செய்யும் பினராயி விஜயன்!  

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

 Pinarayi Vijayan imports foreign education to kerala

 

உக்ரைன் ரஷ்யப் போர் வெடித்ததால்தான் நீட் தேர்வால் வதைபட்ட கேரளாவின் 3800 மாணவர்கள், தமிழகத்தின் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மருத்துவக் கல்விக்காக உக்ரைன் சென்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே அதிருமளவுக்கு இந்தியாவிற்குத் தெரியவந்தது.


ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து தமிழகத்திற்குத் தேவையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பாக வருங்கால தலைமுறையான மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் தொழில் நுட்ப, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல் பல்வேறுபட்ட பணிகளில் தீவிரமாகயிருப்பது புருவங்களை உயரவைக்கிறது.


தமிழகத்தில் இப்படி என்றால் அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன். தன் மாநில மாணவர்களுக்காக ஐரோப்பியக் கல்வி முறையைக் கொண்டு வருவதற்காகக் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறார்.


மருத்துவ கனவோடிருக்கும் கேரள மாணவனுக்கு நீட் எனும் முட்டுக்கட்டை. அதே கனவை வெளிநாட்டுப் படிப்பின் மூலம் நனவாக்கிக் கொள்ளலாம் என்றால் வெகுசிலருக்குப் பொருளாதாரம் கைகொடுத்தாலும், பலருக்கோ பொருளாதாரச் சிக்கல். இது போன்ற முரண்பாடுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கல்விக்காக வெளிநாடு செல்லுகிற மாணவர்களின் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் கொட்டித்தீர்ப்பதால் கடன் சுமையால் மீள முடியாமல் தவிக்கிற கொடுமை.


இதனையெல்லாம் அலசி ஆராய்ந்த கேரள முதல்வர், பினராயி விஜயன், மாணவர்கள் தேடி ஓடும் வெளிநாட்டுக் கல்வியை இங்கே இறக்குமதி செய்தால் அங்கே செல்வது தவிர்க்கப்படும். மாணவனின் கல்வித் தரம் வெளிநாட்டிற்கு இணையாக மேம்படும். குறிப்பாக மாணவனின் பெற்றோர் பொருளாதாரத்திற்காகச் சிரமப்பட வேண்டியதில்லை. செலவழிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது என்பதற்காகவே முதன்முதலாக அமெரிக்காவின் முதல்தர பல்கலைக்கழகங்களின் கல்வி முறைகளை இறக்குமதி செய்து கேரள பல்கலைக்கழகத்தில் இணைத்திருக்கிறார்.


இதற்காக மார்ச் 29 அன்று அமெரிக்க அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் நிபுணர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.. இதற்காக கேரள அரசின் கல்வித்துறையில் தனியானதொரு துறையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

 

முதல்வர் பினராயி விஜயன். கேரளாவின் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.பி.ராய், கேரள அரசின் இதற்கான டெல்லி சிறப்பு அதிகாரியான வேணு ராஜாமணி ஆகியோரை கொண்ட குழு அமெரிக்காவின் ராஜீய உறவு அதிகாரியான கான்சல் ஜெனரல் (CONSUL GENERAL) ஜூடித்ரவினுடன் கேரள அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. கேரள மாணவர்களின் கல்வித்திறன் மேலைநாட்டுக் கல்விக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாம்.

 

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களின் சிலபஸ்களான (SYLLABUS) கல்விமுறையைக் கொண்டு கேரள பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கைக்கு ஏற்ப வடிவமைத்து மேலை நாடுகளின் மேம்பட்ட கல்வியைக் கேரள மாணவர்களுக்கு வழங்குவது. இதற்காக ஒப்பந்தத்தின்படி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், கேரள பல்கலைக்கழகங்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றுவர். இதனால் கேரள மாணவர்களின் கல்வித்திறன் மேல் நாட்டுக் கல்விமுறைக்கு ஒப்பானதாக மாறும் என்கிற கேரள அதிகாரிகள், இதற்கு முதல் அச்சாரம் தான் உலகத்தரம் வாய்ந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு போடப்பட்ட ஒப்பந்தம் என்கிறார்கள்.

 

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், வெளிநாட்டிலுள்ள ஒரு பல்கலையின் கம்ப்யூட்டர் டெக்னாலஜி கோர்ஸ்சின் தரம் கேரளாவில் இருக்காது. அந்தப் பல்கலையின் கம்ப்யூட்டர் டெக்னிக் கோர்ஸ் முறையை அந்த யூனிவர்சிட்டியினரின் உதவியுடன் கேரள பல்கலைக் கழகங்களில் இணைத்து மேலை நாட்டுக் கல்வி முறையை இங்கேயுள்ள மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கான ஒப்பந்தம் முதன்முறையாகக் கேரளாவில் போடப்பட்டிருக்கிறது.

 

மருத்துவம், விஞ்ஞானம், நுண்ணிய தொழில் நுட்பம், கலை மற்றும் இலக்கியம் போன்ற பிற கல்வி முறைகளுக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் பொருந்துமாம். இந்த முறையில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சான்றிதழ்களைக் கேரள, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்தே வழங்கும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இந்த ஒப்பந்தம் மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது வேலைவாய்ப்பிலும், பிறநாடுகளுடன் அரசே ஒப்பந்தம் போடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். இதற்காகக் கேரளாவின் டெலிகேட்ஸ் வெளிநாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்து அதற்கான பணியாளர்களைக் கேரளாவிலிருந்து அனுப்பி வைப்பார்களாம். அதே போன்று வெளிநாட்டின் டெலிகேட்ஸ் கேரளாவிலுள்ள தொழில்களை ஆய்வு செய்பவர்கள் அதன்மூலம் தங்களின் நிறுவனத்திற்கான பணியாளர்களை இங்கேயே தேர்வு செய்வார்களாம்.

 

இது போன்று கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும், கேரள அரசால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா, ஜெர்மன், பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப திறன் அமைப்புகளிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமாகியிருக்கிறார்களாம்.

 

இந்த வழிகளில் கேரள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான 250 ஹாஸ்டல்கள் நிறுவப்பட உள்ளன. இந்தியாவில் முதன்முதலாகக் கேரளாவில் டிஜிட்டல் யூனிவர்சிட்டி அமைக்கப்படும். அதில் அமெரிக்காவின் உயர்மட்ட கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள். இதற்காக கேரளாவில் 500 நவகேரளம் பணிகள் டாக்டோரல் ஃபெல்லோஷிப் பலதுறையிலும் உருவாக்கப்படும். அதே போன்று அமெரிக்க நுண்ணிய தொழில் நுட்ப வல்லுநர்கள், கேரள மருத்துவர்களுடன் இணைந்து அமெரிக்க முறையிலான உயிர்காக்கும் ஊசி மருந்துகள் தயாரிக்கப்படும் என்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த தலைவர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Leaders who voted with passion for Lok Sabha elections

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Leaders who voted with passion for Lok Sabha elections

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Leaders who voted with passion for Lok Sabha elections

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 161இல் வாக்களித்தார். கேரளா மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. வேணுகோபால் வாக்களித்தார். ராஜஸ்தான் மாநில பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜலவாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பரவூரில் உள்ள வாக்குச் சாவடியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வாக்களித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எழுத்தாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி பெங்களூருவில் வாக்களித்தார்.

Leaders who voted with passion for Lok Sabha elections

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நரசிங்பூரில் மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் வாக்களித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் வாக்களித்தார். 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.