Skip to main content

பிரதமர் மோடிக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்! 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Siddaramaiah's sensational letter to Prime Minister Modi

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Siddaramaiah's sensational letter to Prime Minister Modi

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதற்காக அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதியும் சில மணி நேரத்துக்கு முன்பு அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றது மிகவும் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசிடம் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கடிதம் ஒன்றைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The Joint Working Group should be renewed CM insists

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 ஆகிய எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

The Joint Working Group should be renewed CM insists

அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனத் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.