Skip to main content

ட்விட்டர் நடுநிலையானது அல்ல - ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

rahul gandhi

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக தற்காலிகமாக முடக்கப்பட்டது. பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

இதன்தொடர்ச்சியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, ட்விட்டர் நிறுவனத்தின் ஆபத்தான விளையாட்டு என்ற பெயரில் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவைல் ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

ராகுல் காந்தி அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது; என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் நமது அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் நமது அரசியலை வரையறுக்க தனது வர்த்தகத்தை பயன்படுத்துகிறது. ஒரு அரசியல்வாதியாக நான் அதை விரும்பவில்லை.  இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல்.

 

இந்தியர்களாக நாம் கேள்விகேட்க வேண்டும். மத்தியஅரசுக்கு நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதாலேயே, நமது அரசியலை நமக்காக வரையறுக்க நிறுவனங்களை நாம் அனுமதிக்க போகிறோமா? அதுதான் நடக்க போகிறதா? அல்லது நமக்கான அரசியலை நாமே வரையறுக்கப் போகிறோமா?

 

ட்விட்டர் கணக்கை முடக்கியது ராகுல் காந்தி மீதான தாக்குதல் அல்ல. இது வெறுமனே ராகுல் காந்தியின் வாயை மூடுவது மட்டுமல்ல. 19-20 மில்லியன் பேர் என்னை பின்தொடர்கிறார்கள். அவர்களுடையே கருத்துரிமையையும் நீங்கள் மறுக்கிறீர்கள். இது நியாயமற்றது என்பதோடு ட்விட்டர் நடுநிலையானது என்ற கருத்தையும் மீறுகிறது. அரசியல் ரீதியாக சார்புநிலை எடுப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது முதலீட்டாளர்களுக்கு ஆபத்தானது. நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதியில்லை. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ட்விட்டரில் நாம் நினைத்ததை முன்வைக்கலாம் என நினைத்தேன். ஒரு ஒளிக்கீற்று இருப்பதாக கருதினேன். ஆனால் இப்போது ட்விட்டர் நடுநிலையானது அல்ல ஒரு சார்புடையது என தெரிந்துள்ளது. அன்றைக்கு ஆட்சியில் உள்ள அரசு சொல்வதைத்தான் ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்