Skip to main content

“உன் தந்தையை உருவாக்கியதே நான் தான்..” - தேஜஸ்வி யாதவுக்கு பதிலடி கொடுத்த நிதிஷ் குமார்!

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

Nitish Kumar responds to Tejashwi Yadav bihar assembly

பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது அக்கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். அதன்படி, பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கூட்டணியில் இருந்து பிரிந்ததில் இருந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், நிதிஷ் குமார் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது என்றும் நிதிஷ் குமாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார். ஆனால், லாலு பிரசாத் யாதவின் அழைப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார். 

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, முதல்வர் நிதிஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பேசிய தேஜஸ்வி யாதவ், “2005க்கு முன்பு, நிதிஷ் குமாருக்கு ஏற்கனவே 55 வயது. அவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து மத்திய வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். இந்த விவாதம் நடைபெறும் சட்டமன்றக் கட்டிடமும் 2005க்கு முன்பே இருந்தது. லாலு பிரசாத் யாதவுடன் பலருக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. லாலுவை ஒரு முள்ளாகப் பார்க்கும் அந்த கண்கள் பாதுகாப்பாக இருக்கட்டும். இந்த அரசாங்கம் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், 2005க்கு முந்தைய காலத்தையே குறை கூறிக்கொண்டே இருக்கும்” என்று கூறி விமர்சித்தார்.

இந்த விவாதத்தின் போது இடைமறித்த முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது, “முன்பு பீகாரில் என்ன இருந்தது? உங்கள் தந்தையை மாற்றியதற்கு நான்தான் காரணம். உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள், ஆனாலும் நான் அவரை ஆதரித்தேன். உங்களுக்கு எதுவும் தெரியாது. பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினையை லாலு யாதவ் எதிர்த்தபோது. அது தவறு என்று நான் சொன்னேன், அந்த நேரத்தில் நான் அவரை எதிர்த்தேன்” என்று பதிலடி கொடுத்தார். 

சார்ந்த செய்திகள்