நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது என பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இது குறித்து பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் அளித்த பெட்டியில், "கடந்த 70 ஆண்டுகளில் நாம் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டதே இல்லை. முழு நிதித்துறையும் மாபெரும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் உடனே செய்ய வேண்டும்" என கூறினார்.
இந்நிலையில் தற்போது திடீரென தனது கருத்து தவறாக பரப்படுவதாக தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இதனை ஊடகங்கள் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது பொருளாதாரத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தைரியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும். யாரும் பீதி அடையவோ, பயத்தை பரப்பவோ தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.