ஊரடங்கு காரணமாகப் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட சூழலில், சென்னையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் சுமார் 1000 கிலோமீட்டர் கடல்வழியாகப் பயணம் செய்தி சொந்த ஊர்களுக்குத் திருப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரசால் 23,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மே 3- ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை போன்ற பகுதிகளிலிருந்து வருமானத்திற்கு வழியில்லாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பிய சம்பவங்களும் அண்மைக்காலத்தில் அதிகளவில் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில், பேருந்துகள் எதுவும் கிடைக்காத நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஊர்திரும்பியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
ஒடிசா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்கே இவர்கள் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்ட அவர்கள், போக்குவரத்துக்குச் சேவைகள் எதுவும் இல்லாததால், கடல் வழியாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். சுமார் 27 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கோண்டு தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் தலா 7,000 ரூபாய் போட்டு, 1,73,000 ரூபாய்க்கு 3 ஆண்டுகள் பழமையான ஒன்பது எச்.பி திறன் இன்ஜின் கொண்ட படகு ஒன்றை வாங்கியுள்ளனர்.

பயண காலத்திற்குத் தேவைப்படும் அரிசி, காய்கறிகள் ஆகியவற்றைப் படகில் எடுத்துக்கொண்டு கடல் வழியாகப் பயணித்து ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். வழக்கமாகக் கடலோர காவல்படை அக்கடல் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர்கள் காவல் படையினரின் கண்களில் சிக்காமல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்குச் சென்றடைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊருக்குச் சென்ற இந்தத் தொழிலாளர்கள் தனிமை முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.