Skip to main content

கூட்டாட்சிக்கு எதிரான போக்கைத் தவிருங்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

modi - mamata

 

பெட்ரோல்-டீசல் விலை இந்தியா முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்ததுடன், டீசல் விலையும் நூறை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

"பொதுமக்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்" எனத் தனது கடிதத்தில் கூறியுள்ள மம்தா, "மே 4 முதல் உங்களது அரசு 8 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 6 முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. அதில் ஒரே வாரத்தில் நான்கு முறை விலையேற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இந்த கொடுமையான பெட்ரோல், டீசல் விலை பொது ஜனங்களை பாதிப்பதோடு, அபாயகரமாக உயர்ந்து வரும் பணவீக்கத்தில் நேரடியாகப் பாதிக்கிறது. பொது மக்களுக்குத் துயரத்தை விளைவிக்கும் வகையிலான கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காக உங்களிடம் எனது கவலையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து "2014 -15 ஆண்டிலிருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களில் இருந்து மத்திய அரசு பெறும் வரி 350 சதவீதம் அதிகரித்துள்ளது" எனக் கூறியுள்ள மம்தா, "மத்திய வரி வருமானத்தில் செஸ் கூறை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே செல்வது மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய 42 சதவீத பங்கை மறுப்பதில் போய் முடிகிறது. கடந்த சில வருடங்களாக உருவாகியுள்ள இந்த கூட்டாட்சிக்கு எதிரான போக்கை நீங்கள் தவிர்க்க வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்"  எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மம்தா, பெட்ரோல் -டீசல் விலையைக் கணிசமாகக் குறைத்து பொதுமக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென்றும், நாட்டில் இன்றுள்ள பணவீக்கம் குறித்து ஆராயுமாறும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.