ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தனிக் கட்சி தொடங்கியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்தனர்.

அதற்கு அடுத்து நடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி வைத்து வெற்றி பெற்று, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அண்ணன், தம்பி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மக்களவைத் தேர்தலில் அண்ணனின் ஆதரவாளர்களுக்கு தேஜஸ்வி யாதவ் சீட் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகிய தேஜ் பிரதாப் யாதவ் 'லாலு ராப்ரி மோர்ச்சா' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
மேலும் இந்த கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.