கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தில், வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் Zoom. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அண்மையில் கூகுள் நிறுவனம் அறிவித்த நிலையில், Zoom பாதுகாப்பானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![home affairs ministry says zoom app is not safe](http://image.nakkheeran.in/cdn/farfuture/m9ZKS1ZnOl6yaIdN1yChWMuZBDcOEsf4N8urz4516iQ/1587033371/sites/default/files/inline-images/sdfdffsd.jpg)
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பாலானார் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடர்புகொள்ள உபயோகிக்கும் ஒரு மென்பொருள்தான் Zoom.
அலுவலகப் பணிகள் சார்ந்த சந்திப்புகளுக்கு, நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கு என பலதரப்பட்ட காரணிகளுக்காக இந்த மென்பொருள் உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த மாதம், மதர்போர்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐபோன் மற்றும் ஐபாட்களுக்கான Zoom செயலியிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
இது சர்ச்சையான நிலையில், இந்தச் செயலியின் மூலம் பயனர்களின் மைக்ரோஃபோன்கள் மற்றும் வெப்கேம்களை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தி ஆப்பிள் ஐமாக்கினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும் எனக் கண்டறியப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் Zoom செயலின் பாதுகாப்பு தரம் குறித்துக் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், Zoom பாதுகாப்பானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், Zoom செயலியை பயன்படுத்த விரும்புவோருக்கான சில முக்கிய ஆலோசனைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.