Skip to main content

“பயங்கரவாதிகளை ஆதரிப்பது இஸ்லாத்தை ஆதரிப்பது என நினைத்து கொண்டிருக்கிறார்கள்..” - சி.பி. ராதாகிருஷ்ணன்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Governor C.P. Radhakrishnan criticized DMK Government

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் நேற்று (29-10-23) ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் களமச்சேரி போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். விசாரணையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், 90 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்பவரும் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமியும் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இதனையடுத்து கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை விமர்சனம் செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”கேரளாவும், தமிழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல்வேறு கட்டங்களிலே ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக இரு மாநில அரசுகளில் பயங்கரவாதிகளை ஆதரிப்பது தான் இஸ்லாத்தை ஆதரிப்பது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். வெடிகுண்டுகளை வைப்பவர்களை, கொலை செய்பவர்களைப் பாதுகாக்கும் அரசாகத்தான் இரண்டு அரசுகளும் இருக்கின்றன.

 

முக்கியமாக ஒரு கிறிஸ்துவர், தன்னுடைய கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வைத்திருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. எனவே, இந்த சம்பவத்தில் கேரளா அரசு முனைப்புடன் செயல்பட்டு உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும், அல்லது இதில் என்.ஐ.ஏ தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இது போன்ற பேராபத்துகளிலிருந்து நம்மை பாதுகாக்க முடிம்” என்று கூறினார் .

 

Governor C.P. Radhakrishnan criticized DMK Government

 

இதனை தொடர்ந்து, புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வெடிகுண்டு சம்பவங்களை மாநில அரசுகள் தீவிரமாக விசாரிக்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. மாநில அரசுகளுக்கு இது போன்ற ஒரு எண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நடந்த சம்பவத்தையும், கேரளாவில் நடந்த சம்பவத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். 

 

குண்டு வைத்துத்தான் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்ற மனநிலை நமது இந்தியாவில் இருக்கக் கூடாது. கேரளா நிகழ்வுக்கு பிறகு தமிழகமும் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குண்டுகள் மூலமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கம் தமிழகத்திலும் ஆரம்பமாகி விட்டது. எனவே, பயங்கரவாத கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்