நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டில் 73% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை தங்கம் இறக்குமதி 73% அதிகரித்து ரூபாய் 3.37 லட்சம் கோடி ஆக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூபாய் 1.95 லட்சம் கோடி அளவிற்கே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அளவின் அடிப்படையில், ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை 842 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதங்களில் தங்கம் இறக்குமதி அதிகரித்திருப்பதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ரூபாய் 13.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்து, ஆபரணங்கள் தயாரிப்பதற்காக அதிகளவு இந்தியாவில்தான், தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் ஆபரணங்கள் ஏற்றுமதி 57.5% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.