Skip to main content

ஜி.டி.பி மட்டும்தான் இந்தியாவின் இழப்பா? பட்டியலை பதிவிட்ட ராகுல் காந்தி

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

Rahul ghandhi

 

 

சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.4% ஆக குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அதன் பின்னும் அரசு தவறான கொள்கைகளையே மேற்கொண்டது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவில் இந்தியா தத்தளிக்கிறது’ என்ற ஒரு பட்டியலை பதிவிட்டுள்ளார். அதில்,

 

1.      வரலாற்றில் இல்லாத அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) -23.4% குறைவு

2.      45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாயிப்பின்மை

3.      12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்

4.      மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தரவில்லை

5.      உலகிலே அதிகபடியான தினசரி கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை

6.      நமது எல்லைகளில் அண்டைநாடுகளின் ஆக்ரமிப்பு

 

என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் 45 வருடங்கள் இல்லாத அளவிலான வேலைவாயிப்பின்மை என்பது கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது. அப்பொழுது இதனை மத்திய அரசு உடனடியாக வெளியிடவில்லை. இதன் காரணமாக 2018-ம் ஆண்டு டிசம்பர் 29  தேதி தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் தலைவரான பி.சி.மோகனன் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் மீனாட்சி ஆகிய இருவரும் பதவி விலகினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்