Skip to main content

தேர்தல் தோல்வி எதிரொலி; கமல்நாத் பதவி பறிப்பு 

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Electoral Defeat Echoes; Kamal Nath stripped of office

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 66 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் தோல்வியடைந்தது. தேர்தல் தோல்வியால் மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த கமல்நாத் தனது பதவியை இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தோல்வியைத் தழுவியது என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, போபாலில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் மத்தியப் பிரதேச முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அடுத்த முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டு கடந்த 13 ஆம் தேதி மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டு வந்த கமல்நாத், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து இன்று (16-12-23) நீக்கப்பட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜிது பட்வாரி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரிடம் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைவராக இருந்த கமல்நாத்தின் பதவி பறிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்