Skip to main content

8ஆவது சம்மனும் புறக்கணிப்பு; அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Arvind Kejriwal's sensational response from the Enforcement Directorate

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப். 14 ஆம் தேதி 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அதில், வருகிற 19 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்திருந்தது. அதனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், தற்போது கடந்த மாதம் 22ஆம் தேதி 7ஆவது முறையாக அமலாக்கத்துறை அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று (04-03-24) ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையில், தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை மூலமாக தன்னை கைது செய்து பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க பா.ஜ.க முயற்சி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், இன்று ஆஜராகுமாறு 8வது முறையாக சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், வரும் மார்ச் 12ஆம் தேதிக்கு பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்