Skip to main content

87 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

87-year-old jailed former chief minister!

 

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு (வயது 87) சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிடெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானாவின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை இருந்துள்ளார். ஓம் பிரகாஷ் சவுதாலா இந்திய தேசிய லோக்தளத்தைச் சேர்ந்த ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆறாவது துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.

 

மத்தியப் புலனாய்வுத் துறையின் எஃப்ஐஆர் படி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதலமைச்சராக கடந்த 1999- ஆம் ஆண்டு ஜூலை 24- ஆம் தேதி முதல் 2005- ஆம் ஆண்டு மார்ச் 5- ஆம் தேதி வரை செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1,467 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல வளாகங்கள், குடியிருப்புகள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று (27/05/2022) வெளியான நிலையில், வருமானத்தை விட 189.11 சதவீதம் கூடுதலாக இவர் தன் பெயரிலும், தனது குடும்பத்தினரின் பெயரில் சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் ஏற்கனவே பத்தாண்டு சிறை தண்டனைக்கு ஆளானவர் என்று குறிப்பிடத்தக்கது. 

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

இதையடுத்து, டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையின் பழைய அறையில் அடைக்கப்பட்டார் ஓம் பிரகாஷ் சவுதாலா. 

 

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தற்போது, ஹரியானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிறையில் உள்ள கவிதாவைக் கைது செய்த சிபிஐ!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
CBI arrested Kavita in jail

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதா, அவரின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது  அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பணமோசடி தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னதாக தனது மகனின் 12 ஆம் வகுப்பு பள்ளித் தேர்வுகளை காரணம் காட்டி கவிதா இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பட்வா அமர்வு முன்பு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது” எனத் தெரிவித்து கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.