Skip to main content

தூத்துக்குடியில் தீவிரமாகும் கமிஷன்களின் விசாரணை!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

 

தூத்துக்குடி மண்ணில் மனித ஜீவராசியே வாழ தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாநகர மக்கள் தன்னெழுச்சியாக சுமார் 30 ஆயிரம் பேர் கிளம்பிய அமைதி பேரணியில், தடியடி ஏற்படுத்தி துப்பாக்கிச் சூடு வரை கொண்டுபோன காவல்துறையின் அத்துமீறலால் 13 பேரின் உயிர்கள் பலியாகின. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 

இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை. காரணம்,  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் தங்களின் மீது கொடூரமான வழக்குகள் பாயலாம் என்ற அச்சம் காரணமாக பலர்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டினை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கண்டித்தன. இதைத் தவிர டெல்லி உயர்நீதிமன்றம் வரை துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் எதிரொலித்தது. 

 

 

 

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி டெல்லியின் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க பணித்தது. அதன் அடிப்படையில் அந்த ஆணையத்தின் சக்தி வாய்ந்த விசாரணை அதிகாரியான எஸ்.பி.பபுல்தத்தா பிரசாத் தலைமையில் 4 போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்காக தூத்துக்குடிக்கு கடந்த 3ஆம் தேதிக்கு வந்தனர். 
 

அவர்கள் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகளை விசாரித்தனர். இதனிடையே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனான ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். வந்தவுடன் நேற்று மாலையே அவர் விசாரணையை தொடங்கினார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. மற்றும் ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். 
 

அதன் பிறகு இன்றைய தினம், தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பழைய அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி விசாரணை நடத்தினார். அதுசமயம் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் நடந்ததை மனுக்களாக தரலாம் என்று கூறினார். 
 

மருத்துவமனையில் இருந்த சோரீஸ்புரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் நீதிபதியை சந்தித்தார். அப்போது அவர் நீதிபதியிடம், தான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபோது தடியடியாலும், துப்பாக்கிச் சூட்டாலும் மக்கள் கலைந்து ஓடினார்கள். நானும் ஓடினேன். அப்போது எனது வலது விலாவில் துப்பாக்கி குண்டு துளைத்து சென்றது. நான் மயங்கிவிட்டேன். என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மேலும் என் மீது வழக்கு பாயுமோ என்ற கவலையும் இருக்கிறது என்று நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதற்கு நீதிபதி, வழக்குகளை பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். 

 

 

 

இதையடுத்து, டெல்லி தேசிய ஆணையக் குழுவினர் தூத்துக்குடி மில்லர் புரத்தில் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தங்கி, விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக நடந்த விசாரணையில் பேரணி கிளம்பிய தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத்தில் இருந்து 8 கி.மீ. தாண்டி 3வது மைல் வரை சென்ற பேரணியில் வழியோரங்களில் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் டிஎஸ்பி போன்ற அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஒரு சில ஆய்வாளர்கள் தங்களது வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்து கொண்டு போனார்கள். அதை வாங்கிப் பார்த்த சீனியர் எஸ்.பி. பிரசாத், தமிழ் எங்களுக்கு தெரியாது, அதனால் ஆங்கிலத்தில் உங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்து வர வேண்டும் என்று திருப்பி அனுப்பிவிட்டார். 

 

 

 

விசாரணை நடக்கும் பகுதிக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 42 பேரில் 16க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்டனர். 
 

தேசிய மனித உரிமை ஆணையம் நாளை வரை தங்கி விசாரணை முடித்துக்கொண்டு திரும்புகிறது. வரும் 18 அல்லது 20ஆம் தேதிக்குள் இந்த ஆணையம் தனது ஆய்வறிக்கையை ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்திலும், ஆணையத்திலும் சமர்பிக்க இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.