Skip to main content

'வேண்டாம் விட்டுடுனு சொன்னேன் கேட்கல...!' மனைவியின் ஆண் நண்பரை கொலை செய்த வாலிபர்!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020


 

salem district vazhappadi incident police investigation

 

வாழப்பாடி அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட்டுவிடும்படி பலமுறை கூறியும் கேட்காததால், மனைவியை வைத்தே அவருடைய ஆண் நண்பரை கணவர் கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40), விவசாயி. சொந்தமாக இரண்டு டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் வைத்து, வாடகைக்கு விட்டு வந்தார். இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

 

நேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவு, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

 

இந்த நிலையில்தான், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் குப்புறபடுத்த நிலையில், சதாசிவம் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய இரு கைகளும் பின்பக்கமாக கட்டிப்போடப்பட்டு இருந்தது. கை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் சதாசிவம் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

 

வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). இவருடைய மனைவி பவித்ரா (24). இவருக்கும், கொலையுண்ட சதாசிவத்திற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. 

 

இவர்களின் நெருக்கத்தை அரசல்புரசலாக தெரிந்து கொண்ட ரஞ்சித்குமார், இருவரும் உடனடியாக தொடர்பை விட்டுவிடும்படி எச்சரிக்கை செய்தார். ஒரு கட்டத்தில் பவித்ரா, குடும்பத்தின் நலன் மற்றும் கணவரின் மிரட்டலுக்கு அடிபணிந்து, சதாசிவத்தை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் சதாசிவம், ரஞ்சித்தின் மனைவியை சந்திப்பதை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சதாசிவத்தை தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது உறவினரான குமார் (34) என்பவரின் உதவியை நாடியுள்ளார். 

 

கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரஞ்சித்குமார், தனது மனைவியையே பகடைக் காயாக பயன்படுத்தினார். அதாவது, மனைவியை வைத்தே சதாசிவத்தை உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார் ரஞ்சித். அதை நம்பி ஆசையுடன் சதாசிவம் அர்த்த ராத்தியில் பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டுக்குள் ஒளிந்திருந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பர் குமாரும், அவரை மடக்கிப்பிடித்து கைகள் இரண்டையும் கயிறால் பின்பக்கமாக இறுக்கிக் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

அதன்பிறகு, அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வீட்டில் வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து அவர்கள் சடலத்தை அருகில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

இக்கொலை தொடர்பாக ரஞ்சித்குமார், அவருடைய மனைவி பவித்ரா, நண்பர் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.