Skip to main content

விரைவில் விடுதலை! மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

 

சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் அவர்களின் விடுதலையில் வெளிச்சம் உருவாகியிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் நிலையில் விடுதலை விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! 

 

7 tamils



             

நளினி, பேரறிவாளன், முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பதை கடந்த 2018, செப்டம்பர் 6-ந் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனையடுத்து செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவையை கூட்டி விவாதித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரைத்தார். 

ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்கவில்லை. அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்தும் விடுதலை செய்யும் விவகாரத்தினை கிடப்பிலேயே இன்று வரை வைத்திருக்கிறார் கவர்னர்.  

           

இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தின் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நளினி.  அந்த வழக்கு கடந்த ஜனவரி 8-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்றிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என கூறியிருந்தது மத்திய அரசு. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள்  முடிவெடுக்க வேண்டும் என ஆளுநரை நிர்பந்திக்க முடியாது எனவும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. 
             



மத்திய அரசின் நிலைப்பாட்டையும் குறிப்பாக ஜனாதிபதியின் முடிவும் தெரியாமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது எவ்வித முடிவையும் எடுப்பதில்லை என தமிழக ராஜ்பவன் உறுதியாக இருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்ததால் ரிலாக்ஸ் ஆனார் ஆளுநர். மத்திய பாஜக அரசின் அந்த நிலைப்பாடு அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அதேசமயம்,  பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.    
            

இந்த சூழலில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு கடிதங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை கவர்னர் பெறத் தேவையில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அப்படி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும்,  கவர்னர் எந்த முடிவையும் எடுக்காமல் காலதாமதம் செய்தபடியே இருந்தார். 
             

இந்நிலையில், நளினி தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமை (7.2.2020) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த பதிலால் ஏழு பேர் விடுதலையில் நீடித்து வந்த அரசியல் மற்றும் சட்டரீதியிலான முட்டுக்கட்டைகள் நீங்கியிருக்கிறது. அதனால், கவர்னரை முடிவு எடுக்க வலியுறுத்த காலநிர்ணயம் செய்யப்பட வில்லை என  இனியும் காரணங்களை கவர்னர் மாளிகை அடுக்கிக்கொண்டு இருக்க முடியாது. அதனால், விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்; செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள். 
              

நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்திருக்கும் இந்த சூழலில், ஜனாதிபதியுடனும் சட்ட நிபுனர்களுடனும் ஆலோசனை நடத்தியப் பிறகே இதில் முடிவெடுக்க தீர்மானித்துள்ளது கவர்னர் மாளிகை!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.