Skip to main content

நாளை இந்த வேளையில் கர்நாடகாவின் நிலை?

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், அங்கு ஆளாளுக்கு ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக 125 முதல் 130 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்றும், தனது கணிப்பு ஒருபோதும் தப்பானதில்லை என்றும் எடியூரப்பா சொல்லியிருக்கிறார். அதேசமயம், எடியூரப்பா கனவுலகில் வாழ்கிறார் என்று காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. மறுபக்கம், மதசார்பற்ற ஜனதாதள தலைவர், தான்தான் முதல்வர் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.

 

Karnataka

 

இந்நிலையில் கர்நாடக அரசியிலில் கடந்த தேர்தல்களின் நிலையை அறிந்துகொள்ளலாமே. 2013 தேர்தலில் காங்கிரஸ் 223 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதாதளம் 222 இடங்களில் போட்டியிட்டு 40 இடங்களை கைப்பற்றியது. பாஜக 222 இடங்களில் போட்டியிட்டு 40 இடங்களில் வெற்றி பெற்றது. எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதாக் கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிபெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 30 லட்சத்து 69 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

 

முந்தைய தேர்தலில் 110 தொகுதிகளை பெற்ற பாஜக 28 தொகுதிகளைப் பெற்ற குமாரசாமியிடம் கோல்மால் செய்து எடியூரப்பா விலக காரணமாக இருந்தது. அதைத்தொடர்ந்தே அவர் தனிக்கட்சி தொடங்கினார். 

 

2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரம் வாக்குகளை பெற்றது. மதசார்பற்ற ஜனதாதளம் 63 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.

 

பாஜக தனித்து 62 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகளுடன் எடியூரப்பாவின் வாக்குகளையும் சேர்த்தால் சுமார் 93 லட்சம் வாக்குகள் ஆகும். இந்த பிரிவு சுமார் 72 இடங்களை பாஜக இழக்க காரணமாக இருந்தது.

 

நடந்து முடிந்த 2018 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக்கணிப்பை காங்கிரஸும் பாஜகவும் ஒதுக்கித் தள்ளுகின்றன. ஆனால், மதசார்பற்ற ஜனாததளம் கட்சி அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இரண்டு கட்சிகளிடமும் பேரம்பேசி முதல்வர் பதவியைப் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறது. 

 

2008 தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றிபெற்று 6 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அந்த 6 பேரில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி விலகினார். அதைத்தொடர்ந்து சதானந்த கவுடா முதல்வரானார். அவருக்கும் எடியூரப்பா ஆதரவாளர்களுக்கும் ஒத்துவராததால் குழப்பம் ஏற்பட்டது. எடியூரப்பா தன்னை மீண்டும் முதல்வராக்கும்படி கட்சியை வலியுறுத்தினார். ஆனால், ஜெகதீஷ் ஷட்டரை முதல்வராக நியமித்தது பாஜக மேலிடம்.

 

இதில்தான் அதிருப்தி அடைந்து தனிக்கட்சி தொடங்கினார் எடியூரப்பா. அதையடுத்து, 2013 தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் 122 இடங்களுடன் வெற்றிபெற்று சித்தராமய்யா தலைமையில் ஆட்சி அமைத்து முழுமையாக 5 ஆண்டுகளை பிரச்சனையின்றி கடந்தது. இதுவே சித்தராமய்யாவின் திறமைக்கு சாட்சியாக கருதப்படுகிறது.

 

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்குள் சித்தராமய்யாவுக்கு போட்டி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கட்சி மேலிடம் தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக நியமித்தால் வரவேற்பதாக சித்தராமய்யா கூறியிருக்கிறார். இதுபோன்ற சமூகநீதிக்கு ஆதரவான கருத்துக்களால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், மதசார்பற்ற ஜனதாதளத் தலைவரான குமாரசாமி, தன்னை கிங் மேக்கர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். தானே கிங் என்றும் அடித்துச் சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் தொங்கு சட்டசபை அமைந்தால் தனக்கு முதல்வர் பதவி அளிப்பவர்களுக்கே ஆதரவு என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சித்தராமய்யா கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சித்தராமய்யா மதசார்பற்ற ஜனதாதளத்திலிருந்து காங்கிரஸுக்கு மாறியவர். அவருக்கும் குமாரசாமிக்கும் கருத்துவேறுபாடு நீடிக்கிறது. அதேசமயம் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்கு எந்த முடிவுக்கும் சித்தராமய்யா சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது.

 

நாளை முடிவு தெரிந்துவிடும். காங்கிரஸா? பாஜகவா? கூட்டணி அரசா என்று!

 

 

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே?” - சித்தராமையா தாக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?

சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார்.