Skip to main content

ஜெ. கொடுத்த வாக்குறுதி..! அலட்சிய எடப்பாடி! அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021
dddd

 

"அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கமாட்டேன்' என முதலமைச்சர் எடப்பாடி பிடிவாதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். இதனால், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருளாதார வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

 

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, சம்பள உயர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட வருடங்களாகப் போராடிவருகிறார்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் கோரிக்கையை புறந்தள்ளியே வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்' என 2016 தேர்தலின்போது தெரிவித்தார். அதை நம்பி அ.தி.மு.க.வை அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். ஆட்சிக்கும் வந்தார் ஜெயலலிதா. நிறைவேற்றாமலேயே இறந்துபோனார். "அம்மா ஆட்சி' என்கிற எடப்பாடியும் கண்டுகொள்ளவில்லை என்ற கொந்தளிப்பு அரசு ஊழியர்களிடம் உள்ளது.

 

பழைய பென்ஷன் திட்டத்தின்படி அரசு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் குறிப்பிட்ட அளவில் பலன்களும், அதன் தொடர்ச்சியாக மாத ஓய்வூதியமும், இறந்தபிறகு அந்தக் குடும்பத்திற்கு கிடைத்து வந்தது. புதிய ஓய்வூதியத்தில் இவை சாத்தியமில்லை. எல்லாமே தாமதம்தான். அண்மையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 14ஆயிரம் பேரில் சிலர் இறந்தும் போய்விட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு இன்றளவிலும் பலன்கள் கிடைக்கவில்லை. இத்திட்டத்திற்கான உரிய நெறி முறைகளும் இல்லை.

 

dddd

 

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் இது குறித்து நாம் விவாதித்த போது,’""பழைய ஓய்வூதிய திட்டம்ங்கிறது அரசு ஊழியர் களிடம் மாதம்தோறும் குறிப் பிட்ட தொகையை அரசு பிடித்துக்கொள்ளும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு அந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை மாதாமாதம் பென்ஷனாக அரசு வழங்கும்.

 

இந்த திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசும் ஊழியர்களும் பங்களிப்பை செலுத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தியது. அதாவது, அரசு ஊழியர் களிடம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அதே அளவிலான தொகையை அரசும் செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அந்த தொகை திருப்பித் தரப்படும். இதுதான் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டத்தில் விருப்பமிருந்தால் மாநில அரசு இணைந்து கொள்ளலாம் என்ற அரசாணையின்படி, முதலில் கையெழுத்திட்டு இணைந்தவர் ஜெயலலிதா.

 

"இதனால் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யுங்கள்' என போராடினோம். உண்மைகளை காலதாமதமாக உணர்ந்த ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் "புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய் வோம்' என்றதுடன், அது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் கமிட்டியை அமைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இறந்து போனார். வல்லுநர் கமிட்டியின் காலத்தை மட்டும் நீட்டித்தே வந்த முதல்வர் எடப்பாடியிடம் கமிட்டியின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதனை இதுநாள் வரை வெளியிட மறுப்பதுடன் எங்கள் கோரிக்கையில் அக்கறையும் காட்டவில்லை.

 

dddd

புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை, அதற்கான வட்டி தொகை ஆகியவை மூலம் தற்போது சுமார் 36,000 கோடி ரூபாய் தமிழக அரசின் பொதுக்கணக்கில் இருக்கிறது. இந்த தொகையை ரிசர்வ் வங்கியிலுள்ள மத்திய அரசு கருவூலப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள்.

 

இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் தொகை மட்டும் 18,000 கோடி ரூபாய். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால், அரசு பங்களிப்பாக உள்ள 18,000 கோடி அரசுக்கு லாபம். பழைய பென்ஷன் திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும். இதுதவிர, 1.4.2019 முதல் அரசின் பங்களிப்பு தொகையை மட்டும் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக மத்திய அரசு உயர்த்திவிட்டது. திட்டத்தில் தமிழக அரசு இணைந்திருப்பதால் இந்த உயர்வை முதல்வர் எடப்பாடி அரசும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

 

அதாவது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தில் 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதே 100 ரூபாயை அரசும் வழங்கி வந்தது. ஆனால், 1.4.2019 முதல் அரசு ஊழியரிடம் 100 ரூபாய் பிடித்தம் செய்தால் அரசாங்கமோ தனது பங்களிப்பு தொகையை 140 ஆக செலுத்த வேண்டும். இதனால் இந்த 4 சதவீத உயர்வினால் சுமார் 1200 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும். அந்த வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தால் இந்த 1,200 கோடி ரூபாயும் அரசுக்கு லாபம்.

 

இது மட்டுமல்ல, இந்த திட்டத்தில் மத்திய கருவூல பெட்டகத்தில் தமிழக அரசு வைத்துள்ள 36,000 கோடிக்கும் தற்போது 3.17 சதவீத வட்டித் தொகைதான் தருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் பணமாக இருக்கும் 18,000 கோடிக்கு தமிழக அரசோ 7.1 சதவீத வட்டி தருகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 சதவீத வட்டி வாங்கும் தமிழக அரசு, ஊழியர்களுக்கு 7 சதவீத வட்டி தருகிறது. இதன் மூலம் 4 சதவீத வட்டி அதிகமாக தருவதால் வருடத்திற்கு 1,400 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம்.

 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் 20,600 கோடி (18,000+1,200+1,400) ரூபாய் தமிழக அரசுக்கு லாபம் ஏற்படும்.

 

ஆனால், ரத்து செய்வதில் அக்கறை காட்ட மறுக்கிறார்கள் இதனால் 20,600 கோடி ரூபாய் நடப்பாண்டில் நட்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 4 லட்சம் கோடிக்கு அதிகமான கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசு, புதிய பென்சன் திட்டத்தினால் 20,600 கோடி ரூபாய் நட்டத்தையும் சந்தித்து வருவது கவலை தருகிறது'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார் பிரடெரிக் ஏங்கெல்ஸ்.

 

இது குறித்த உண்மைகளை முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., தலைமைச்செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தெரிவிப்பதற்காக, பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.

 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர். இவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ""எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இது மிகப்பெரிய உதாரணம். இப்படிப்பட்ட திட்டங்களால் ஏற்படும் நட்டங்களால்தான் அரசு கஜானா திவாலாகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்'' என்று உறுதியளித்திருக்கிறார்.

 

தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தபோது, ""முன்னாள் நிதித்துறைச் செயலாளரான தலைமைச் செயலாளர் சண்முகமும், தற்போதைய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அரசுக்கு ஏற்படும் நட்டங்களை குறைப்பது குறித்து எந்த உருப்படியான யோசனையையும் சொல்வதே இல்லை. குறிப்பாக, புதிய பென்ஷன் திட்டத்தின் பாதகங்களை முதல்வர் எடப்பாடியிடமும் நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் விவரித்து ரத்துசெய்ய முயற்சித்திருக்கலாம். ஏனோ அந்த முயற்சியை அவர்கள் எடுக்க வில்லை''’என்கின்றனர்.

 

இதுபற்றி கருத்தறிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை தொடர்புகொள்ள நாம் முயற்சித்தபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. அலுவலக எண்ணை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அரசுத் தரப்பின் விளக்கத்தை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம். 

 


 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.