Skip to main content

ஒற்றைத் தலைமைதான்... அதுவும் சசிகலாதான்... அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

 

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரனும் கூறியிருந்தனர். இதையடுத்து ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 
 

இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.


 

 

sasikala


 

ஆலோசனை கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நினைக்கிறீர்கள்? 
 

நியாயத்தை பேசுவோம் என்பதால் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பவில்லை. நேற்று வரை இரண்டு எம்எல்ஏக்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதைப்பற்றி யாரும் எதுவும் பேசாமல் செல்கிறார்கள். இந்தக் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வருவதை அவர்கள் விரும்பவில்லை.
 

ஒற்றைத் தலைமை வருவதை யார் விரும்பவில்லை?
 

ஒற்றைத் தலைமை வருவதை தலைமை நிர்வாகிகள்தான் விரும்பவில்லை. உண்மையான தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள். ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. தன் மகனை வெற்றி பெற வைக்க பாடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக முறையாக செயல்பட்டு மற்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற ஏன் பாடுபடவில்லை. மகனை அழைத்துக்கொண்டு மத்திய அரசில் உள்ள எல்லோரையும் பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கான நலத்திட்டங்களை ஏன் பெறவில்லை. 
 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா இந்த கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், அவரை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கெஞ்சியது, காலில் விழுந்தது இப்போதுள்ள முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அனைவரும்தான். இன்று சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று வாக்களித்தவர் ஒருங்கிணைப்பாளர், ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர். இவர்கள் இந்த கட்சியை எப்படி வழிநடத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர்களது செயல்பாடுகளை பார்த்தால் ஜெயலலிதாவின் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 
 

ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் சசிகலாதான். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் இருந்து செயல்பட்டவர். ஜெயலலிதா எப்படி ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டார்களோ, அதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சியினரையும் தெரிந்தவர் சசிகலா. மேலும் தமிழகத்தில் எங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. பலமாக இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதிமுக மீது உண்மையான அக்கறை கொண்டவர் சசிகலா மட்டுமே. 
 

ஒற்றைத் தலைமை தேவையில்லை. இரண்டை தலைமையே நன்றாக செயல்படுகிறது என்று கூட்டத்திற்கு பிறகு சொல்கிறார்களே?
 

நன்றாக செயல்பட்டிருந்தால் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்கள்.
 

சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்களே...
 

எதற்கு அந்த கட்டுப்பாடுகள். எதற்கு செய்தியாளர்களை சந்திக்க கூடாது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொல்லக்கூடாது. அவர்கள் பற்றிய குறைபாடுகளை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக, தங்களைப் பற்றிய உண்மை வெளியே வந்துகொண்டிருப்பதால் என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்று சொல்லுகிறார்கள். பா.ஜ.க.வால்தான் அதிமுக தோற்றது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மை. சிவி சண்முகம் சொன்ன கருத்தை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்கிறேன். 


 

 

kallakurichi mla prabhu


 

சபாநாயகர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அது எந்த நிலைமையில் இருக்கிறது...
 

நாங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போகக்கூடியவர்கள் கிடையாது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றோ, திமுகவுடன் கைக்கோர்க்க வேண்டும் என்றோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் கொடுத்திருக்கிறார்களே தவிர, இந்த கட்சிக்கோ, ஆட்சிக்கோ எந்தவித அவப்பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் நான் செயல்படவிலலை. 
 

டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியதாக...
 

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள்தான் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று சசிகலா காலில் விழுந்து அவரை பொதுச்செயலாளராக பதவியேற்க சொன்னார்கள். இந்த வீடியோவை உலகமே பார்த்தது. நாங்கள் என்ன தப்பு செய்தோம். திமுகவுடன் சென்றோமா? வேறு கட்சிக்கு சென்றோமா? நான் இன்று வரை அதிமுகவில்தான் இருக்கிறேன். 
 

 

 

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.