
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமை(1.6.2025) சந்தனக்காப்பு அபிஷேகம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினசரி அம்மன் சிறப்பு அலங்கார வாகனங்களில் வான வேடிக்கைகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க வீதி உலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று 7 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் நேர்த்திக்கடன் வைத்துள்ள வெளியூர் பக்தர் என நூற்றுக்கணக்கானோர் முக்கரைவிநாயகர் ஆலயத்தில் இருந்தும் மேலும் சில குலதெய்வம் கோயில்களில் இருந்தும் ஆட்டம் பாட்டத்துடன், கரும்பு தொட்டில் பால்குடம், தூக்கி வந்து விநாயகர் கோயில் உள்பட வீதிகளை சுற்றி வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இதே போல நாளை ஞாயிற்றுக்கிழமை(8.6.2025) பொங்கல் விழாவும் திங்கள்கிழமை(9.6.2025) மாலை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலிசாரும் செய்து வருகின்றனர்.