Skip to main content

மணல் கொள்ளைக்கான ஆதாரம்... எடப்பாடிக்கு ரிப்போர்ட் அனுப்பிய எஸ்.பி. மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

police sp

 

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையால் காவல்துறையின் கோர முகம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி. அருண்சக்திகுமாரை மத்திய அரசுப் பணிக்கு எடப்பாடி அரசு அனுப்பி வைப்பதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்துகிறார்கள் மக்கள். இந்த மாற்றத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக ஐ.பி.எஸ்.அதிகாரிகள், ‘இதன் பின்னணியில் மணல் மாஃபியாக்களின் கைகள் உயர்ந்திருக்கிறது எனப் பகீரூட்டுகிறார்கள்.

 

ஐ.பி.எஸ். அதிகாரிகளை மட்டுமே உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குரூப்புகளில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ’’தமிழக காவல்துறைக்கு பல்வேறு பணிகளில் உதவி செய்ய ஊர்க்காவல் படை (ஹோம் கார்ட்) இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரியா காமண்டர் என்பவரின் தலைமையில் இந்தப் படை இயங்கும். புதுக்கோட்டை மாவட்ட ஏரியா கமாண்டராக மணிவண்ணனும், உதவி ஏரியா கமாண்டராக செல்வராஜும் இருந்தனர். ஊர்க்காவல் படை கமாண்டர்கள் மணல் மாஃபியாக்களோடு இணைந்து மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்றும், ஊர்க்காவல் படையில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்றும் எஸ்.பி. அருண்சக்திகுமாரிடம் புகார்கள் குவிந்தன.

 

இதனை விசாரித்து பல ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறார் அருண்சக்திகுமார். குறிப்பாக, ஏரியா கமாண்டர் மணிவண்ணனை பற்றிய ஆதாரங்கள் அவை. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்த மணிவண்ணன், தனது தொழிலுக்கு பாதுகாப்புத் தேடி ஊர்க் காவல்படையில் இணைந்து கொண்டார். போலீஸ் அதிகாரிகளுக்கு செய்ய வேண்டியதைச் செய்ததன் மூலம் ஏரியா கமாண்டர் பதவியையும் கைப்பற்றினார். இந்தப் பதவியின் பாதுகாப்பில் மணிவண்ணனின் மணல் பிஸ்னெஸ் கொடி கட்டியது.

 

தமிழகத்தின் மணல் பிஸ்னெஸ் சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் கைகளுக்கு மாற, ராமச்சந்திரனோடு கைக்கோர்த்த மணிவண்ணன், மணல் கொள்ளையின் சூட்சமங்களை ராமச்சந்திரனுக்கு கற்றுக்கொடுத்தார். ராமச்சந்திரன்- மணிவண்ணன் கூட்டணி மணல் பிஸ்னெஸ்சில் உச்சத்துக்குப் போனது. வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் மணல் கொள்ளையைக் கண்டுகொள்ளாமலிருக்க, காவல்துறையின் உயரதிகாரிகளை இயல்பாகவும் எளிதாகவும் சந்திப்பதற்குத் தனது ஊர்க்காவல் படையின் பதவியைப் பயன்படுத்தினார் மணிவண்ணன். புதுக் கோட்டை, திருச்சி, கரூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலரும் மணிவண்ணனின் ரகசிய நண்பர்களானார்கள். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இவர்களின் நட்பைக் கொண்டுபோனது அப்போதைய உளவுத்துறை. அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா, மணிவண்ணனை பற்றியும் அவருக்கு உதவும் அதிகாரிகளைப் பற்றியும் கூடுதல் விபரங்கள் கேட்டிருந்தார். ஜெ.வுக்கு உடல்நலன் குன்றிய நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சிக்கிய மணல் மாஃபியாக்களோடு இவரும் சிக்க வேண்டியவர். ஆனால், அவர்களைப் பற்றி போட்டுக்கொடுத்ததால் தப்பித்தார்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியின் அலுவலக அதிகாரிகள் சிலரின் நட்பு கிடைக்க, அதனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார் மணிவண்ணன். இதன்மூலம், கோட்டையில் அரசு எடுக்கும் பல ரகசிய முடிவுகள் மணிவண்ணனுக்கு முன்கூட்டித் தெரிந்துவிடும். இதனைப் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கசிய விட்டுத் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்வார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.பி.க்களாக வருபவர்கள் மணிவண்ணனுக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலும் கன்ஃபர்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

 

இதில் தப்பித்தவறிய, நேரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் எஸ்.பி.அருண் சக்திகுமார். இவரிடம் கிரிமினல்களின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை. புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, மக்களுக்கான போலீஸ் அதிகாரி எனப் பெயரெடுத்தார். அந்த வகையில், ஊர்க்காவல் படையை வைத்துக்கொண்டு மணிவண்ணன் நடத்தும் மணல் ராஜ்ஜியத்தைக் கண்டுபிடித்த அருண் சக்திகுமார், மணிவண்ணனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, "மணல் கொள்ளையில் நீங்கள் ஈடுபட்டு வருவதற்கும், மணல் மாஃபியாக்களுக்கு நீங்கள் உதவியாக இருப்பதற்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஊர்க்காவல் படையில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் தவறுகள் மிகக் கடுமையானவை'' என எச்சரித்தார். மிரண்டுபோன மணிவண்ணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

இதற்கிடையே, ஊர்க்காவல்படையிலுள்ள பணியாளர்களுக்கான சம்பளத்தில், 13 கோடியே 27 லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதைக் கண்டுபிடித்த அருண்சக்திகுமார், மணிவண்ணனின் தோஸ்தான, உதவி ஏரியா கமாண்டர் செல்வராஜை வரவழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அத்துடன், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உதவி ஏரியா கமாண்டர் பதவியை செல்வராஜ் ஆக்ரமித்திருப்பது பற்றியும் கடுமைகாட்ட, ஊழல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட செல்வராஜ், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து முதல்வர் எடப்பாடிக்கு ரிப்போர்ட் அனுப்பியபடியே இருந்து வந்தார் அருண்சக்திகுமார். மணல் மாஃபியாக்களுக்கு எதிராக இவர் எடுத்த நடவடிக்கைத்தான் மாற்றலுக்கு காரணமாக இருக்கிறது என விவரிக்கிறார்கள் உள்துறை அதிகாரிகள்.

 

http://onelink.to/nknapp

 

மணிவண்ணன் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடமே கேட்டபோது, "குற்றச்சாட்டுகள் தவறானவை. என் சொந்தக் காரணங்களுக்காகத்தான் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்கிறார். எஸ்.பி. அருண்சக்திகுமாரிடம் நாம் பேசிய போது, "மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென அரசிடம் விருப்பம் தெரிவித்திருந்தேன். அதன்படியான மாற்றம்தான்'' என்கிறார் பட்டும் படாமலும்.

 

மணல் மாஃபியாக்களின் கைகள் ஆட்சி அதிகாரத்தில் அதிகரித்திருப்பதால் இந்த விவகாரத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

 

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.