Skip to main content

7 அண்டாவில் தங்கம்..! பூதம் காக்கும் புதையல்.. ஆற்றங்கரை அரண்மனை ரகசியம்..!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                          அரண்மனை 

 

‘ஆற்றங்கரை’, பெயருக்கு ஏற்ப வைப்பாறு கரையோரம் இருக்கும் அழகிய கிராமம். வரப்போடு நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்க, அவற்றுடன் குசலம் விசாரித்துக்கொண்டிருக்கின்றன கொக்குகள். இயற்கையின் கருணைப் பார்வையால் இந்த ஆண்டு வஞ்சனையில்லாமல் பசுமை பூத்திருக்கிறது இந்த அழகிய கிராமம். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இந்த கிராமத்தின் அரண்மனையில் ‘தங்க புதையல்’ இருப்பதாகவும், அதனை பூதம் ஒன்று காவல் காப்பதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் இங்குண்டு.

 

ஊரின் முகப்பிலேயே ஆழி கருப்பசாமி சிலை வரவேற்கிறது. வழியெங்கும் பொங்கி குலுங்கிய இயற்கை அழகினூடே உள்ளது அந்த அரண்மனை. பழங்காலத்திற்கே உரிய கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட அந்த அரண்மனை, முகப்புக் குலையாமல் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே சில கட்டடங்கள் மட்டும் சிதிலமடைந்து கிடக்க, அங்கிருக்கும் மிகப்பெரிய தானியக்குதிர் (அந்த காலத்தில் களஞ்சியம் என அழைக்கப்பட்டது) நம்மை வரவேற்கிறது. மக்களிடம் வரியாக வசூலிக்கும் தானியங்களை இதில்தான் சேமித்து வைப்பார்களாம்.

 

முன்னோக்கி நகர்ந்தால் கேட்பாரின்றி கிடக்கும் ஆட்டு உரல், கவனிப்பாரின்றி கிடக்கும் குதிரை லாயம், கிழிந்த நிலையில் காணப்படும் முரசு, மண் மேடாக காணப்படும் தர்பார் மண்டபம் எல்லாம் அரண்மனை என்பதற்கான அடையாளத்தை இன்னமும் தாங்கி நிற்கிறது.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                      வீர பெருமாள்

 

அங்கிருந்த அரண்மனைக் காவலாளி வீர பெருமாளோ, "இங்கே நான் கொஞ்ச காலமாத்தான் வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன். இப்ப அர்ஜூன் என்பவர் நிர்வாகம் பார்க்கிறார். அதற்கு முன்னர் அவுங்க அப்பா தனஞ்செயன்தான் அரண்மனையைக் கவனித்தார். அவர்கள் எல்லாம் மதுரையில் இருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வந்து போவார்கள்” என்றவரிடம் புதையல் இருப்பதாக ஊரெல்லாம் பேசுகிறார்களே? என்கிற கேள்வியை முன் வைத்தால், "அது எல்லாம் எனக்குத் தெரியாதுய்யா” எனக் கூறிவிட்டு வாசலுக்கு வழியைக் காண்பித்தார். அவர் அருகிலிருந்த வேட்டை நாயான சிப்பிப்பாறை நாயும் நம்மை மிரட்டவே நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.

 

இருப்பினும், கரிசல் மண்ணுக்குத் தனி இயல்பு உண்டு. அங்கு வசிக்கும் மக்களும் எதையும் மனதிற்குள் வைக்க மட்டார்கள். அவர்களின் பேச்சுக்கும் தனி நடை உண்டு என்பதால் ஊரில் சிலரிடம் பேச்சு கொடுக்க, "எங்க தாத்தா இந்த அரண்மனையில் வேலை பார்த்தார். அதாவது ராசா(மன்னர்) குதிரை வண்டியில் வரும்போது அவருக்குப் பின்னாடியே ஓடிச் செல்லனும். ராசா இறங்கும்போது அவருக்கு உதவி செய்யுற வேலை பார்த்தார். ஒவ்வொரு வருஷமும் அரண்மனையில் இருந்து எங்களுக்கு அரிசி, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் கொடுப்பார்கள். அரண்மனைக்குன்னு நிறைய நிலம், தென்னந்தோப்பு, பனங்காடுகளும் உண்டு. அதையெல்லாம் குத்தகைக்கு விட்டு வரி வசூல் பண்ணுவார்கள். அதேபோல் அரண்மனைக்கு சொந்தமான ஆடு, மாடுகளை மேய்க்கிறதுக்கும் கூலி ஆட்கள் உண்டு. அவர்களுக்குக் கூலியாக கம்பரிசிதான் கொடுப்பார்கள்.

 

ராசா நகர்வலம் வரும்போது பெண்கள் தங்களது மாராப்பு சேலையைக் கீழே இறக்கி நின்று கும்பிடு போடனும். ஆண்கள் தங்களது மேல் துண்டை கக்கத்தில் கட்டி பவ்யமாக நின்று கும்பிடனும். எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் வரை இந்த நடைமுறை இருந்தது. ஒவ்வொரு வருஷமும் சித்திரை முதல் நாளில் நாளேறு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அரண்மனையில் முரசு சத்தம் ஒலிக்கும். ஊர்சனம் எல்லாம் அங்கு ஒன்று கூடியதும், ராசா கொடியசைச்ச உடன் நாளேறு நடக்கும். அன்றைக்கு சாயந்திரம் ஆற்றின் கரையோரம் இருக்கும் நட்டாத்தி அம்மனுக்கு, கொடை விழா நடத்தப்படும். ராசா குதிரை வண்டியில் வந்திறங்குவார்.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                     நாகம்மாள்

 

அவருக்குப் பரிவட்டம் கட்டி, அழைத்துச் செல்வார்கள். கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் தேவராட்ட இசைக்கு ஏற்ப நடனமாடி முன்னே செல்ல, ராசா பின்னாடி வருகிற காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். இப்பவும், சித்திரை முதல் நாள் திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால், அந்தப் பழைய பாரம்பரியம் இல்லை. ஆனால், ராசா வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்போதும் கோவிலில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஆற்றங்கரை ஜமீனுக்கு பாத்தியப்பட்டதுதான் குருவார்பட்டி. அங்குள்ள பெருமாள் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரண்மனை சார்பில் பூஜை நடத்தப்படும். அப்போது அருள் வந்து ஆடும் பூசாரி கருங்கிடாயின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு சொல்லுவார். இப்போதும் இந்தப் பூஜை நிகழ்ச்சி தொடர்கிறது” என மண்மனம் மாறாமல் வெள்ளியந்தியாய் அள்ளித் தெளித்த நாகம்மாளிடம் அரண்மனைக் காவலாளியிடம் வைத்த அதே கேள்வியை முன்வைத்தோம். 

 

"நாங்க சின்னபுள்ளைகளாக இருக்கும்போது அங்கே புதையல் இருக்கு, அதை பூதம் காத்திருக்கு. அதனால், அரண்மனைப் பக்கம் போகாதீங்கன்னு சொல்லக் கேட்டிருக்கேன். சுப்பிரமணிய பெத்தனல் பூபதி அரசாட்சி செய்யும்போது, அவரது கனவில் நட்டாத்தி அம்மன் வந்து, ஆற்றில் 7 அண்டாவில் பணமும், தங்கமும் இருக்கு எடுத்துக்கோ என்று சொன்னதாம். அவரும் போய் ஆற்றில் இருந்து தங்கத்தையும், பணத்தையும் எடுத்து வந்து அரண்மனையில் வைத்து பூட்டிவிட்டார். ஆனால், பலி ஏதும் கொடுக்காமல் பூட்டி வைத்ததால், கடைசி வரை அந்த அறையைத் திறக்கவே முடியவில்லையாம். அதற்குப் பிறகு எவ்வளவோ முயன்றும் பூதத்திடம் இருந்து புதையலை மீட்க முடியவில்லையாம்” என்றார் அவர்.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                         முத்து சுந்தர பெத்தன அப்பணசாமி

 

ஆற்றங்கரை ஜமீனில் பணியாற்றிய முத்து சுந்தர பெத்தன அப்பணசாமியோ, “30 வருஷத்திற்கு மேலாக நான் அங்கேதான் வேலை பார்த்தேன். இப்ப நான் வேலை பார்க்கலை. அங்கு புதையல் இருக்கா? இல்லையா எனத் தெரியவில்லை. எங்க அப்பா காலத்தில் இருந்து இன்னும் நம்பப்படுகிறது. பூதத்திற்குப் பரிகாரம் செய்தால் புதையலை எடுக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” என்கிறார் அவர்.

 

புதையலும், பூதமும் ஒன்றுதான்! இருக்கிறங்கவங்களுக்கு இருக்கு, இல்லைங்கிறவங்களுக்கு இல்லை! இதுதான் யதார்த்தம். 

 

படங்கள் : விவேக்

 

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி நிகழ்ச்சியின் அழைப்பிதழில் சர்ச்சை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Controversy in Prime Minister Modi's program invitation

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்கத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளுடனும் உரையாடினார். மாநாட்டில் உரையாற்றுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. அதே சமயம் பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், நம் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Controversy in Prime Minister Modi's program invitation

மேலும் நாளை (28.02.2024) காலை 8.40 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, கீதாஜீவன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் பெயர் இடம்பெறவில்லை. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் இடம் பெறாதது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.