Skip to main content

2021ல் ரஜினி கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்! - சொல்கிறார் பொங்கலூர் இரா. மணிகண்டன்

Published on 13/03/2020 | Edited on 14/03/2020

போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களை   தெரிவித்தார்.

 

PONGALUR MANIKANDAN



ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ''ரஜினி விரும்பும் அரசியல் எழுச்சி உருவாக எல்லோரும் திரளுவோம். அரசியல் புரட்சி உருவாக மக்களிடையே புரட்சியை ஏற்படுத்துவோம். ரஜினியை ஆதரித்து கொங்கு மண்டலத்தில் புதிய இயக்கம் தொடங்குவோம்' என்று பொங்கலூர் இரா. மணிகண்டன் நக்கீரன் இணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதையடுத்து பொங்கலூர் இரா. மணிகண்டனை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் கட்சித் தொடங்குவதற்காக ரஜினி வைத்துள்ள மூன்று திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமாகும். அது சாத்தியமானால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்.

சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது. இந்தத் திட்டங்கள் எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனரே?

தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகளும் சாதாரண கட்சி கிடையாது. இந்தத் திட்டங்களை முன்பே கூறியிருந்தால் அதை திசை மாற்றி இருப்பார்கள். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதில் ஒரு நல்லதும் இருக்கிறது. 
 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே கட்சியில் இருப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு அது தேவை இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆட்சி அமைப்பதற்காக ஒரு அமைப்பு தேவை. ஆட்சி அமைத்தபிறகு மக்களுக்கு எது தேவையோ, அது ஆட்சியின் மூலம் செய்யப்படும். அதன் பிறகு கட்சி அமைப்பு தேவையில்லையே. அந்த அமைப்பு அடுத்த தேர்தலுக்குத்தான் தேவைப்படும்.

இது உங்களுடைய நிலைப்பாடாக இருந்தால் அரசியல் கட்சிக்கு நிர்வாகிகள் வருவார்களா?

கண்டிப்பாக வருவார்கள். இது வரை இல்லாத ஒரு புது மாதிரியான விஷயம் இதுதான். வெளிநாடுகளில் இப்படித்தான் உள்ளது. 24 மணி நேரமும் கட்சிதான் தொழில் என்று இருக்க கூடாது. அதை மாற்றுவதற்காகத்தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய அரசியல் கட்டமைப்புதான் இருக்கும் என்றால் ரஜினி தேவையில்லையே. புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது நடைமுறை சாத்தியமும் கூட. கட்சி நிர்வாகிகளும் கட்சி பதவி எதுவும் தேவையில்லை, ஒரு மாற்றம் நடந்தால் மட்டும் போதும் என்றுதான் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் 30 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராமல் இருக்கிறார்கள். அவர்கள் செலுத்தும் வாக்குத்தான் இரண்டு கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சிக்கு கொண்டுவருகிறது. அவர்கள் மத்தியில் ரஜினி கூறிய செய்தி சென்றிருக்கும்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு என்று தெரிவித்திருக்கிறார். தேர்தலில் ரஜினி ஒரு இளைஞரை நிறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சிக்கு வர மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவும், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் ஒரு வல்லவரை வேட்பாளராக நிறுத்தும் போது, அந்த இளைஞரின் வெற்றி எப்படி சாத்தியமாகும்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பண விநியோகம் நடத்தியது. ஆனால் மக்கள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதே போல் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்தார்கள். ஆனால் மக்கள் பணம் கொடுத்தவரை தோற்கடித்து விட்டு, பணம் கொடுக்காதவர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆரம்பித்தில் மக்கள் பணத்திற்காகத்தான் வாக்களித்தார்கள். அனைவரையும் சொல்லவில்லை. ஆனால் தற்போது மாற்றம் வந்துவிட்டது. கட்சிக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற அளவிற்கு மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் கமல் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளும் அப்படித்தான். இது எல்லாம் விலைமதிப்பில்லாத வாக்குகள். தற்போது பணம் கொடுப்பவர்களுக்கு எதிராகவே மக்கள் திரும்புகிறார்கள். 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



கட்சிக்கு இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமா?. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக அறிவித்து, அவரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது. அதன் பிறகுதான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்தார். அப்படி இருக்கும் போது இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவது தமிழக அரசியலுக்கு ஒத்து வருமா?

நாம் அரசியலை மக்களிடம் அப்படியே பழக்கி வைத்து விட்டோம். இனிமேல் மக்கள் ஒரு அமைப்பிற்காக ஓட்டு போட வேண்டும். ரஜினிதான் நாட்டை ஆள வேண்டும் என்று இல்லையே. நல்லவர் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை ரஜினி கூறி, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் மக்கள் ஓட்டு போடுவார்களா?

ரஜினி கூறுவதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரஜினியின் பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால் கட்சி தொடங்குவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆர் மாதிரி வர முடியாது என்று கூறுகிறார்கள். அவர் உண்மையிலேயே கட்சி தொடங்குவாரா? 2021ல் தேர்தலில் நிற்பாரா?

நான் சிறுவனாக இருந்த போது கோவை செழியனோடு சென்று ரஜினியை பார்த்தேன். அப்போது அரசியலுக்கு வருவது குறித்து பிடி கொடுக்காமல்தான் பேசினார். ஆனால் அன்று இருந்த நிலை வேறு. இன்று உள்ள நிலை வேறு. அதனால் அவர் உறுதியாக அரசியலுக்கு வருகிறார். தற்போது இவ்வாறு பேசுவது, இந்த பேச்சு மக்கள் மத்தியில் எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்பதற்காக மட்டுமே, நூறு சதவீகிதம் அவர் 2021ல் அரசியலுக்கு வருகிறார். அதிமுக, திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ரஜினியுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரும் எல்லா கட்சியில் இருந்தும் வாருங்கள் என்றுதான் கூறுகிறார். யாரையும் வெறுக்கவில்லை. அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று ரஜினி கூறுவது வரவேற்க வேண்டிய ஒன்று. 2021 தேர்தலில் ரஜினி - மற்ற கட்சியினர் என்றுதான் போட்டி இருக்கும். ரஜினியை எம்ஜிஆர்வுடன் ஒப்பிடாதீர்கள். அன்று இருந்த மக்கள் மனநிலை வேறு, இன்று உள்ள மனநிலை வேறு. தற்போது ஆட்சி மாற்றம் வேண்டாம். அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2021ல் ரஜினி வழிகாட்டுதலின் பேரில் ஆட்சி நடக்கும். அவர் கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.