Skip to main content

அந்த கேவலமான பசங்களை எப்படியாவது புடிக்க வையுங்க  சார்... பொள்ளாச்சி சம்பவம்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஏப். 28-ஆம் தேதியிலிருந்து மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்ததும் விலகிக்கொண்டனர். ஆனாலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டிற்குள் சி.பி.ஐ. திடீரென நுழைந்து ஏகப்பட்ட ஆதாரங்களை அள்ளிச் சென்றதாகவும் அதற்கடுத்ததாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிலரிடம் விசாரித்ததாகவும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. 
 

pollachi



இதை உறுதிப்படுத்துவதற்காக பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரில் இருக்கும் சபரிராஜன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம். காலிங்பெல்லை அழுத்தியதும் பெண்களும் சிறுவர்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தனர். "சபரிராஜன் வீடு இதானே' என நாம் கேட்டதும்... "ஆமா நீங்க யாரு?' என்றார் சபரிராஜன் அம்மா. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுதான் தாமதம், "இங்கிருந்து உடனே கிளம்புங்க, உங்ககிட்டயெல்லாம் பேச முடியாது' என பட்டாசாக வெடித்தார். நாம் அவரை போட்டோ எடுப்பதைப் பார்த்ததும் முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி, இரும்புக் கேட்டை படாரென சாத்திவிட்டு, வீட்டுக்குள் போய்விட்டார். அந்த சிறுவர்களும் நம்மை வெறித்துப் பார்த்தபடி உள்ளே போய்விட்டனர். 
 

pollachi issues



அங்கிருந்து நாம் கிளம்பி, அந்த ஏரியாவில் வசிக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்தித்து சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. வந்தது குறித்து விசாரித்தோம். ""இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகாம சபரிராஜன் வீட்டுக்குப் போனதுக்கு காரணம் இருக்கு. பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்த நடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் டீம் முதலில் தூக்கியது சபரிராஜனைத்தான். அவன் மூலமா திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகும்போது, அவன் அம்மாதான் அவனை தப்பிக்கவிடுகிறார்.
 

pollachi issues



அதுக்கப்புறம் சதீஷ்குமார், வசந்தகுமார்னு வரிசையா பலரை கைது செய்து, அவர்களிடமிருந்து சி.டி.க்கள், போட்டோக்களையெல்லாம் கைப்பற்றிவிட்டது  நடேசன் டீம். இப்ப எதுவுமே இல்லாத சபரிராஜன் வீட்டில் என்ன கிடைத்துவிடப்போகிறது?. பெரிய பில்டிங் காண்ட்ராக்டரான சபரிராஜனின் அப்பா அசோகனிடம், "உங்க பையன் எங்க வேலை பார்த்தான், எவ்வளவு சம்பளம் வாங்கினான், உங்க குடும்பத்துல எத்தனை பேரு'ன்னு கணக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. இந்த சி.பி.ஐ. முதல்ல விசாரிக்க வேண்டியது, இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ.க்கள் ராஜேந்திர பிரசாத், பாஸ்கர், எஸ்.எஸ். எஸ்.ஐ.ரகு ஆகிய இவர்களைத்தான்''’ என்றவர் மேலும் சில தகவல்களை சொல்லத் தொடங்கினார். 

 

pollachi issues



சபரிராஜனும் திருநாவுக்கரசும்தான் பொம்பளப் புள்ளைங்களைத் தூக்குறதுல கில்லாடிகள். மொதல்லயெல்லாம் சபரிராஜன் தாடி வச்சிருக்கமாட்டான். ஒரு ஆக்சிடெண்ட்ல தாடை கிழிஞ்சு போய், தையல் போட்டிருந்தாங்க. அந்த தழும்பு தெரிஞ்சா பொண்ணுங்க அசிங்கமா நினைக்கும்னுதான் தாடி வளத்துக்கிட்டுத் திரியுறான்''’என்றார். அங்கிருந்து கிளம்பி நேராக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று, நமக்கு பழக்கமான டாக்டர்கள் சிலரிடம் பேசிய போது, ""ஆமா சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். கடந்த அஞ்சு வருஷத்துல எத்தனை இளம்  பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, இல்ல வேற காரணங்களுக்காக அட்மிட் ஆனாங்களா, அவுங்களோட வீட்டு அட்ரஸ் ஆகிய விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிட்டுப் போயிருக்காங்க''’என்றனர். 

பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ. சேகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்... பொள்ளாச்சி பாலியல் வில்லன்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணையில் உண்மை அம்பலத்திற்கு வரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.இந்நிலையில் நமக்கு 2 போன்கால்கள் வந்தன. "நான் மேற்கு மண்டலத்துல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல இருந்து பேசறேன். நான் பொள்ளாச்சியில ஏழு வருசத்துக்கு முன்னால கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐயா இருக்கும் போது நடந்த சம்பவம் ஒண்ணு உங்ககிட்ட சொல்றேன்.

மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில முபாரக்குன்னு ஒருத்தரு இருக்காரு, இப்ப அவரு அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர். அவரு அப்ப ஒரு சி.டி. கடை வச்சிருந்தாரு. அவரு ஆபாச படங்கள் விக்கிறதா வந்த புகாரின் பேர்ல நைட்டோட நைட்டா கடைக்குள்ள ரெயிடு போகணும்னு அப்ப டி.எஸ்.பி.யா இருந்த பாலாஜி சார், மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டாரு.

5,000 சி.டி.க்களை புடிச்சோம். அந்த சி.டி.க்கள்ல சிலதை பிளேபண்ணி பார்த்தோம். அதுல பல பொண்ணுகளை பலவிதமா மெரட்டி பசங்க எடுத்த பல வீடியோக்கள் இருந்துச்சு. "இவனுங்க யாருன்னு கண்டுபிடிக்கோணும்'னு உயர் அதிகாரிகள்கிட்ட உணர்ச்சியா சொன்னேன். ஆனா அவங்க என்னைய அதற்கடுத்த நாளே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அப்ப  தவறவிட்ட அந்த  கேவலமான பசங்களை எப்படியாவது -இப்பவாவது புடிக்க வையுங்க  சார்'' என உணர்ச்சியாய் சொன்னார் அந்த போலீஸ் அதிகாரி.

இரண்டாவது போன்கால். "தவறாக எப்படி சொல்லலாம் பாஸ்ட்ஃபுட்  கடையை பற்றி? நீங்கள் எப்படி பொள்ளாச்சி கோட்டூர்புரம்  ரோட்டில் ஓம்பிரகாஷ் பெட்ரோல் பங்க்குக்கு எதிரில் உள்ள அடித்து உடைக்கப்பட்ட பாஸ்ட்ஃபுட் கடையை திரும்பவும்... அது பார் என்று சொல்லலாம்?' எனக் கேட்டது அந்தக் குரல். நாம், கடந்த 12-ந் தேதி காலை 11:20 மணிக்கு பெட்ரோல் பங்க்குக்கு முன்னால இருக்கற டாஸ்மாக் கடை (கடை எண்:1862)யை ஒட்டியுள்ள பாஸ்ட்ஃபுட் கடைக்குள் சென்று பார்த்தோம். அமோகமாக பிராந்தி, விஸ்கி, பீர் என டாஸ்மாக் கடை திறக்கும் 12 மணிக்கு முன்னதாகவே பாஸ்ட்ஃபுட்  கடையில் விற்கப்படுவதை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்து வந்தோம். அமோகமாய் செயல்படுகிறது பாஸ்ட்புட் கடை. இவற்றையும் சி.பி.ஐ. கவனிக்கும் என்கிறார்கள். 
 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.