Skip to main content

எல்லாம் ரொம்ப ஹேப்பியா தான் இருக்காங்க! எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்! அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

wwww

 

தேர்தல் தீர்ப்பை மக்கள்தான் வழங்குவார்கள் என்றாலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளருக்கான ரேஸ் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இடையே பலமாக உள்ளது. அ.தி.மு.க. வின் அதிகார மையம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என பல அமைச்சர்கள் வெளிப்படையாகக் கூற தொடங்கியுள்ளனர். இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.சும் கூட்டறிக்கை வெளியிட்டாலும் இருவருமே தங்கள் ஆதரவாளர்கள் மூலம் முதல்வர் வேட்பாளருக்கான போஸ்டர் யுத்தத்தைத் தூண்டியபடியே இருக்கிறார்கள்.


 
கொங்கு பகுதி அமைச்சர் ஒருவர் தன் பங்குக்கு அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடியார் தான் என புகையைப் பற்ற வைத்துள்ளார். செப்டம்பர் 8 அன்று பவானி சட்டமன்றத் தொகுதி கவுந்தப்பாடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணன்.

 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் மக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள்'' என்றதோடு... "இப்போது தேர்தல் வந்தாலும் அண்ணன் எடப்பாடியார்தான் மீண்டும் முதல்வர் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை'' என உறுதிபட கூறினார். அமைச்சர் கருப்பணன் பேசியது துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி யுள்ள நிலையில் அ.தி.மு.க. சீனியர் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசினோம்.

 

"முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகலையோட சம்பந்தி அதாவது எடப்பாடியாருக்கும் சம்பந்தி முறைதான் அமைச்சர் கருப்பணன். அந்த உறவு என்கிற தகுதியில்தான் அமைச்சராக கருப்பணன் இப்போதும் இருக்கிறார். ஆக முதல்வர் எடப்பாடியின் கருத்தைத்தான் கருப்பணன் கூறியுள்ளார். திரும்பத் திரும்ப முதல்வர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிதான் என்ற கருத்து மிக ஆழமாகப் பதிய வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நிலைப்பாடு.

 

இதற்கெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்போ அல்லது யாருமே வாய்ப்பூட்டு போட முடியாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். இல்லை யென்றால் யாரும் தனிப்பட்ட கருத்தை கூறக் கூடாது என கட்சி சார்பில் அறிவிப்பு கொடுத்த பிறகும், கட்சி கட்டுப்பாட்டை மீறி ஒரு அமைச்சரே தைரியமாக மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் எனக் கூறுகிறார் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மன உறுதிதான். இதற்காக அமைச்சர் கருப்பணன் மீது ஓ.பி.எஸ். தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பே இல்லை'' என்றார்.


"அமைச்சர் கருப்பணன் மட்டும் இல்லீங்க. எல்லா அமைச்சருமே ரொம்ப ஹேப்பியா தான் இருக்காங்க முன்பெல்லாம் வர்ற வருமானத்தை ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கப்பம் கட்டுவாங்க, ஆனால் முதலமைச்சரா எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புக்கு வந்தபிறகு அந்தந்த அமைச்சர்கள் அவங்கவங்களுக்கு வர்ற வருமானத்தை நீங்களே வெச்சுக்குங்க, இது ஒரு பேக்கேஜ்னு எடப்பாடி சொல்லிட்டாரு அப்புறம் எந்த அமைச்சருங்க மகிழ்ச்சியா இல்லாம இருப்பாங்க? வருமானத்துல பங்கு பிரிக்காம மொத்த கொள்ளையும் அமைச்சர்கள் வூட்டுக்கு போகும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பாங்களா?

 

admk

 

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை வருமானம் குறைவில்லாமல் வர வேண்டும் அதோடு அவரது மகன், குடும்பம், உற்றார் உறவினர்கள், சம்பந்தி வகையறாக்கள் பெரும் செல்வத்தை சேர்க்க வேண்டும் அரசியலில் அதிகாரம் என்ற பவர் குறையக் கூடாது அவ்வளவுதான் அவரின் எதிர்பார்ப்பு. கட்சி நலன், கொள்கை நலன் என்பதெல்லாம் இப்போதுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் யாருக்கும் இல்லை.

 

Ad

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் கொள்ளையடிப்பதை பா.ஜ.க. தலைமை வேடிக்கை பார்த்துக் கொண்டு, பண போதை, அரசியல் அதிகாரம் என்ற போதையில் இவர்களை வைத்துக் கொண்டு வருகிறது. இதே போதையில் வைத்து, அ.தி.மு.க. ஓட்டு வங்கியை பா.ஜ.க.வுக்கு திருப்பிவிடலாம் என்ற கணக்கை அவர்கள் போட்டுள்ளார்கள். எனக்கு தெரிந்து சில அமைச்சர்கள் உண்மையோடு பேசுகிறார்கள். அதாவது வர்ற தேர்தல்லே அ.தி.மு.க. இருபது முதல் அதிகபட்சம் முப்பது எம்.எல்.ஏ. சீட் தான் வெற்றி பெறும் என தெளிவாகக் கூறுகிறார்கள். இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மக்கள் ஆதரவு, தொண்டர்கள் பலத்தில் இப்போதும் அ.தி.மு.க. பலமாகத்தான் அதாவது இரும்பு கோடாரி போல் உள்ளது. ஆனால் அந்த கோடாரிக்கு தலைமை என்கிற கைப்பிடிதான் இல்லை. வெறும் கோடாரி இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை'' என நம்மிடம் விரிவாக பேசினார் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி.

 

எது எப்படியோ, தனது பதவிக் காலம் முடியும் வரை முதல்வர் நாற்காலிக்கு எந்த காலும் முறியாமல் தெளிவாகக் கொண்டு போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.