Skip to main content

அதிமுக சரவணனின் மறுபக்கம்; எடப்பாடி டிக் அடித்ததின் பின்னணி என்ன?

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
  other side of AIADMK candidate Saravanan

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முன்னிறுத்தி தீவிரப் பரப்புரை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் டாக்டர் சரவணன். இவர், மதுரையில் உள்ள பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவராகவும், சூர்யா டிரஸ்ட்டின் நிறுவனராகவும் உள்ளார்.

இந்த முறை மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன் ஸ்டார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான  போட்டியை ஏற்படுத்த வேண்டும் என இந்த முறை அதிமுக தலைமை டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. டாக்டர் சரவணன் மருத்துவப் படிப்பை முடித்த கையோடு 1996 ஆம் ஆண்டிலிருந்து சூர்யா டிரஸ்ட்டை நடத்தி வருகிறார். அதன் மூல பல ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்துவருகிறார். இதனால், மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்த முகமாக டாக்டர் சரவணன் இருப்பதால் அதிமுக தலைமை அவருக்கு ‘சீட்’ வழங்க முன்னுரிமை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. டாக்டர் சரவணன் நடத்தி வரும் சூர்யா டிரஸ்ட்டின் நோக்கமே , ''பொருளாதார சூழ்நிலையால் எந்த நோயாளிக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகக் கூடாது..'' என்பதாகும்.

தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அதிமுக மக்களவை வேட்பாளரும், டாக்டருமான சரவணன் 1992 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த மருத்துவமனையில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நோயாளிகளுக்கு குறைந்த செலவிலும், சில சமயம் இலவசமாகவும் சிகிச்சை வழங்கி வருகிறார். தொடர்ந்து, 30 வருடமாக மருத்துவ சேவையை டாக்டர் சரவணன் வழங்கி வருகிறார். இதனிடையே, தொடர்ந்து கால்கள் இழந்த நோயாளிகளுக்கு செயற்கை கால்களை தனது தொண்டு நிறுவனம் மூலம் இலவசமாகப் பொருத்தி மதுரையில் மருத்துவ சேவையை கொடையாக செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான், வேட்பாளராக டாக்டர் சரவணன் களம் இறக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அவரின் சேவை குணம் வாக்கு வங்கியாக மாறும் என மதுரை மாவட்ட அதிமுகவினர் நம்பிக்கை  தெரிவிக்கின்றனர். மருத்துவத்துறையில் கொடிகட்டி பறந்து வரும் டாக்டர் சரவணன்.. மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மதுரையை மாற்றுவார் என அதிமுக தலைமை நம்பிக்கை வைத்துள்ளது.

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளரான டாக்டர் சரவணன், திரையுலகிலும் சில காலம் பயணித்தார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து தனது நடிப்பு திறமையும் வெளியுலகத்திற்கு காண்பித்தார். தொடர்ந்து, மருத்துவத்தில் செய்த மக்கள் சேவையை  அரசியலிலும் செய்ய நினைத்தார். அதன் காரணமாக மதிமுகவில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் இன்று அதிமுக வரை நீண்டுள்ளது. தொடர்ந்து, களத்தில் இறங்கி தீவிர வேலை செய்வதன் மூலம் கட்சித் தலைமையிடம் நற்பெயரைத் தொடர்ந்து பெற்று வந்தார்.

இந்த நிலையில், தான் மதுரை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக அணியின் வேட்பாளராக டாக்டர் சரவணன் களம் காண்கிறார். இந்த முறை அவரது வெற்றியை உறுதி செய்ய அவரது கட்சியினர் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். களமும் இருமுனை போட்டியாக இருப்பதால் அதிமுக கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணனை முன்னிறுத்தி ஈடுபட்டு வருகின்றனர். மதுரை டாக்டரின் மருத்துவ சேவை ஓட்டு வங்கியாக பிரதிபலிக்குமா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் பதில் சொல்லும்.  

மதுரை மக்களவை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அரசியல் கடந்து தொண்டு நிறுவனம் தொடங்கி மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, டாக்டர் சரவணனின் மருத்துவ சேவையை, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை கவர்ந்த வேட்பாளர் டாக்டர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.