Skip to main content

உருளுசேவா விழாவுக்கு எடியூரப்பா வழங்கும் அனுமதி...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

கர்நாடகாவில் தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் குக்கு என்கிற பகுதியில் சுப்ரமணியசுவாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலில் 500 ஆண்டுகளாக உருளுசேவா ஜாத்ரா என்ற பெயரில் ஒரு விழா நடக்கும். கன்னடத்தில் மட்டி ஸ்நானா. இந்த விழாவில் உணவு பறிமாறப்படும். அதனை பார்ப்பனர்கள் அமர்ந்து உண்பார்கள். அவர்கள் உணவு சாப்பிட்டு எழுந்தபின் அந்த எச்சில் இலைகள் மீது பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்கிற பாகுபாடுயில்லாமல் மேலாடையில்லாமல் படுத்து உருளுவார்கள். ( 50 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினர் மட்டும் அப்படி படுத்து உருண்டுள்ளார்கள், பின்னர் அனைவரும் உருளலாம் எனச்சொல்லி மாற்றியுள்ளார்கள். ) உருண்டபின், அந்த இலைகளை எடுத்து தங்களது தலைமேல் வைத்து எடுத்து சென்று ஆற்றில் விட்டுவிட்டு குளித்துவிட்டு வரவேண்டும்.
 

Made Snana permission


இப்படி செய்வதன் மூலமாக, தங்களது உடலில் உள்ள நோய்கள் தீரும், தீய சக்திகள் விலகும் என்பது கோயில் வரலாற்றில் எழுதப்பட்டுள்ள வரலாறு எனச்சொல்லப்படுகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த உருளுசேவா விழாவில் கூடி பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலை மீது படுத்து உருளுவார்கள்.

இந்த கோயிலில் மட்டும்மல்ல, இதுப்போல் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 3 கோயில்களில் இந்த விழா நடத்தப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி உருளுசேவாவில் கலந்துக்கொள்கின்றனர். இது பகுத்தறிவுக்கு விரோதமானது, அறிவியலுக்கு எதிரானது. உணவு உண்ட இலை மீது படுத்து புரண்டால் நோய்கள் குணமாகிவிடாது, நோய்கள் தான் வரும் என முற்போக்குவாதிகள் பல வருடங்களாக கண்டனம் தெரிவித்துவந்தனர்.
 

Made Snana permission


2014ல் கர்நாடகா முதல்வராக இருந்த காங்கிரஸ் சித்தராமையா, அந்த விழாவை தடை செய்து அறிவித்தார். இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சார்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.

கர்நாடகா அரசு செய்தது சரிதான் எனச்சொல்லி கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தடைக்கு தடை விதித்தது. 500 ஆண்டு பழக்கம் அதனை தடை செய்யக்கூடாது பார்ப்பனர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் சொன்னபோது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? எனக்கேட்டு அந்த விழாவுக்கு தடை விதித்தது.

சில ஆண்டுகளாக நீடித்துவந்த அந்த தடையை தற்போது கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாஜகவின் எடியூரப்பா அரசாங்கம் நீக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மீண்டும் உருளுசேவாவை நடத்த அரசாங்கம்மே திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.