Skip to main content

அன்று எக்னாமி ரேட் 10, இன்று உலகின் நம்பர் 1 பவுலர்...

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
bumrah


 

ஜஸ்ப்ரிட் பும்ராஹ். ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பந்து வீச்சில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை நட்சத்திரம். அதே ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பவர் விராட் கோலி. கோலியை நாம் கொண்டாடிய அளவில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட நாம்  பும்ராஹ்வை கொண்டாடவில்லை என்பதே உண்மை. 
 

ஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றியவர் பும்ராஹ். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாதாரணமாக இன்றுள்ள இந்த இடத்தை அவர் அடைந்து விடவில்லை. மிகப்பெரிய சோதனைகளையும், சில இறக்கங்களையும் சந்தித்து, அதை கடந்துதான் உலகின் நம்பர் 1 பவுலர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இன்றுள்ள வேகபந்து வீச்சாளர்களில் யாரும் இவரை போல யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் இவருக்கு இந்த தலைமுறையில் ஈடுஇணை கிடையாது. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கபடுகிறார்.


2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார் பும்ராஹ். தனது முதல் ஐ.பி.ல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். விராட் கோலி, க்ரிஸ் கெயில் போன்ற உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர்களுக்கு பந்துவீச நேர்ந்தது. தனது முதல் ஓவரை இன்று நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ள கோலிக்கு வீசினார். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரி. மூன்றாவது பந்து டாட். நான்காவது பந்து மீண்டும் பவுண்டரி. ஐந்தாவது பந்தில் கோலியை எல்.பி.டபள்யூ. முறையில் ஆட்டமிழக்க செய்தார். அவரின் மூன்றாவது ஓவரில் கெயில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி. இப்படி சோதனைகளை சந்தித்தாலும் 4 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 3  ஓவரில் 38  ரன்களை கொடுத்தார். விக்கெட் ஏதும் விழவில்லை. 2013-ல் விளையாடிய இரண்டு போட்டிகளில் எக்னாமி ரேட் 10.

 

bumrah


 

2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ராஹ் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 12.  தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை கணடறிந்து அதை மாற்றுவதில் பயிற்சி எடுக்க தொடங்கினார். அதற்கு பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 9 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற உள்ளூர் போட்டிகளிலும் மிகசிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்தார். 

2016-ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முஹம்மது சமியின் காயம் காரணமாக பும்ராஹ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். அன்று முதல் இன்று வரை அவருக்கு ஏறுமுகம் தான். அந்த தொடரில் கிடைத்த 1 ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டி20-ன் 3 போட்டிகளில் 6 விக்கெட்களை கைபற்றினார். பிறகு இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 4.60.  அடுத்து நடைபெற்ற ஆசிய கோப்பை டி20-ன் 5 ஆட்டங்களில் 6 விக்கெட்கள், எக்னாமி ரேட் 5.22.  

 

bumrah


 

கடந்த மூன்று வருடங்களில் நடந்த ஐ.பி.ல்.-லில் 44 போட்டிகளில் 52 விக்கெட்கள், எக்னாமி ரேட் 7. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 44  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 78 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எக்னாமி ரேட் 4.45. சர்வதேச டி20-ல் 37 ஆட்டங்களில் 46 விக்கெட்கள்,  எக்னாமி ரேட் 6.74.  இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது பாக்கியம். இந்திய அணிக்கு ஜாகிர் கானுக்கு பின்பு சிறந்த பவுலர்கள் இல்லாமல் தவித்த உலகத்தரம் வாய்ந்த புவனேஷ் மற்றும் பும்ராஹ் கிடைத்துள்ளனர். 


இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராஹ்க்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிவார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு இணையாக, சில சமயம் அதிகமாக ஆற்றலை வெளிபடுத்தும் பவுலர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.  
 

 

 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.