Skip to main content

"நான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேனா இல்லை கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேனா?"- கலைஞர்

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

எப்போது எவர் எப்படிப் பேசினாலும் அப்போதைக்கு அப்போதே அதற்கான எதிர்வினையை ஆற்றிவிடுவார் கலைஞர். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.. அதைக் கேட்போரும் படிப்போரும் வியக்காமல் இருக்க முடியாது. ஒருமுறை இலங்கையிலிருந்து தலைவர் அமிர்தலிங்கமும் அவருடைய மனைவியும் சென்னைக்கு வந்திருந்தார்கள். விமானநிலையத்துக்கு வரவேற்கச் சென்றார் கலைஞர். அமிர்தலிங்கனாரின் மனைவி கலைஞரைப் பார்த்ததும் “"என்ன இது? உங்கள் தலையில் முடியே இல்லையே?'’ என்றார். கலைஞரோ “"எனக்கு முடிபோய் (ஆட்சித் தலைமை) இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனது உங்களுக்குத் தெரியாதா?'’என்றார் சிரித்துக்கொண்டே அம்மையார் நெகிழ்ந்து போனார்.

 

kalaingar



நடிகர்திலகம் நடித்த “"திரும்பிப்பார்' திரைப்படத் தணிக்கைக்காக அண்ணா சாலையில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் தணிக்கை அதிகாரியின் அலுவலகத்துக்குப் பலமுறை நூறு படிகளுக்கும் மேல் ஏறி இறங்க வேண்டியிருந்தது. சாஸ்திரி என்பவர் தணிக்கை அதிகாரியாக இருந்தார். அவருக்குப்பின் “அய்யர் என்பவர் இருந்தார். நான்காயிரம் அடிகள் வெட்ட வேண்டும் என்றார்கள். எந்த எந்தப் பகுதிகள் என்று கேட்பதற்காக இயக்குநர் காசிலிங்கம் மற்றும் நண்பர்களோடு சென்ற கலைஞர், தணிக்கை அதிகாரியைப் பார்த்து, "அய்யா.. இத்தனை படிகளை ஏறி வருகிறோமே. அதைப் பார்த்துக்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா?'’என்று கேட்டார். "திருப்பதி மலையில் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கே நீங்கள் ஏறிவந்ததும் புண்ணியம்தான்' என்றார் அந்த அதிகாரி கிண்டல் செய்வதுபோல. விடுவாரா கலைஞர்? "திருப்பதியிலும் இங்கேயும் ஒரே "ரிசல்ட் தான்'’’ என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். மொட்டைதான் என்பதைச் சொல்லிக்காட்டவா வேண்டும்?  இப்படித்தான் ஒருமுறை உளிவீச்சு தொடர்பான வழக்கு நெல்லையில் நடைபெற்றது. கலைஞர் சாட்சியம் அளிக்கவேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்டார்.

 

kalaingar



"நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் கருப்புக் கண்ணாடி அணிகிறீர்கள்?'’கலைஞர் பத்தாண்டுகளாக என்றார். பின் வழக்கறிஞர் ஒரு புத்தகத்தைச் சற்றுத் தொலைவிலிருந்து காட்டி இந்தப் புத்தகத்தின் பெயர் தெரிகிறதா? என்று கேட்டார். "சாவி'’என்று பதிலளித்தார் கலைஞர். மறுபடியும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி சாவி என்ற எழுத்துக்குக் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க முடிகிறதா? என்றார். கலைஞரோ, "இந்த இடத்திலிருந்து பார்த்தால் உங்களுக்குக்கூட அந்த எழுத்து தெரியாது' என்றார்.

 

kalaingar



மீண்டும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி "அட்டையில் என்ன படம் இருக்கிறது' என்று கேட்டார். கலைஞர் "நேரு சட்டையில் அணியும் ரோஜா மலர்' என்றார். வழக்கறிஞர் மீண்டும் இன்னும் வேறு ஏதாவது படம் தெரிகிறதா? என்று தொடர்ந்தார். உடனே கலைஞர், "நான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேனா இல்லை கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேனா?' என்று கேட்டார். கலைஞரின் கேள்வியில் நீதிமன்றமே கலகலத்து விட்டது.

-சென்னிமலை தண்டபாணி
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.