Skip to main content

விடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின்  சோகம்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

தமிழகத்தில் குப்பைகளை அகற்றுபவர்கள் இனி துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர். "பேரு வெச்சியே... சோறு வெச்சியா' என்பதற்கிணங்க தூய்மைப் பணியாளர்கள் என பேர் வைத்தால் போதுமா…எங்களது வாழ்க்கையிலும் சுகாதாரமும் ஆரோக்கியமும் வேண்டாமா என கேள்வியெழுப்புகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.


  cleaning work



தமிழகம் முழுவதுமுள்ள தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை 1,25,586. இதில் சென்னையில் மட்டும் 15 மண்டலம் 200 வார்டுகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 19,575 பேர். முச்சக்கர வாகனத்தில் வந்து தூய்மை பணி செய்பவர்கள் 5,400 பேர், பேட்டரி சைக்கிளில் பணியில் ஈடுபடுபவர்கள் 434 பேர். மீதமுள்ளவர்கள் இதர பணிகளில் ஈடுபடுகிறவர்கள். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 5,100 டன் குப்பை சென்னையில் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களை ஏற்கனவே அரசு தனியாரிடம் டென்டர் விட்டிருந்த நிலையில், மேலும் 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய 8 மண்டலங்களையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கம்பெனிக்கு ஒப்பந்தம் மூலம் தற்போது கொடுத்துள்ளது. கரோனா வந்ததையடுத்து அந்த கம்பெனி துப்புரவுப் பணிகளைச் செய்யாமல் நிறுத்திவைத்துள்ளது. வேறுவழியில்லாமல் வழக்கம்போலவே அரசுப் பணியாளர்களும் அரசு ஒப்பந்தப் பணியாளர்களும்தான், இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

cleaning work



இதில் அரசுப் பணியாளர்களைக் காட்டலும் ஒப்பந்த ஊழியர்களே அதிகமானோர் பணிபுரிகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளமான ரூ.15 ஆயிரம் வழங்கப்படாமல் ஒருநாள் கூலியாக ரூ 270 என மாதம் 8100 ரூபாய்தான் இவர்கள் சம்பளம். பி.எப். பிடித்தம், ஈ.எஸ்.ஐ. பிடித்தம் போக மாதம் 6,000தான் கையில் சம்பளமாக வழங்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அரசுப் பணியாளர்களாக மாற்றுங்கள் என்றும், ஊதியத்தை உயர்த்திக்கொடுங்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபடாமல், மக்கள் நலன் கருதி தன்னுடைய உயிருக்கு என்ன நடந்தாலும், மற்றவர்களுக்கு எந்த நோயும் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பணியாற்றும் இவர்களுக்கு இந்த அரசு என்ன பாதுகாப்பு செய்துள்ளது என்று பார்த்தால் பெரிய கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
 

nakkheeran app



எழும்பூர் மருத்துவமனை பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அருகிலுள்ள மருத்துவர் குடியிருப்பில் சற்று இளைப் பாறிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்று பேசியபோது, “என்ன தம்பி செய்யறது சுனாமி குடியிருப்பில் இருந்து நடந்தே எக்மோருக்கு 6 மணிக்கெல்லாம் வரணும். இல்லனா கத்துவாங்க, இப்போதான் பஸ்ஸே வரதில்லையே, அதனால விடியற்காலையிலேயே எழுந்து நடந்து வரணும்.'' என்றார். பாதுகாப்பாக பணிபுரிய முகக்கவசம், கைகழுவ பயன்படுத்தும் கிருமிநாசினி, சோப், கையுறைகள் கொடுக்கிறார்களா என்று கேட்டதற்கு, ""ஆரம்பத்தில் முகக்கவசம் மட்டும்தான் கொடுத்தார்கள், அதுவும் இரண்டு நாளுக்குமேல் வரல, நாங்களே வாங்கிட்டு வருவோம். இல்லையென்றால் துணியால் மூடிக்கொள்வோம்'' என்றார்.

 

speech



அதேபோல அண்ணாநகரிலுள்ள மணிக் கூண்டு சாலையில் கையில் எந்த கையுறையோ, முகக்கவசமோ இல்லாமல் தூய்மை செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்ததும் தன் பெயர் பி.ராஜ்குமார் என்றார். உங்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் தரலயா என்று கேட்டதுமே, "போங்க சார் கரோனா வந்ததிலிருந்து குப்பை அள்ளினுதான் இருக்கோம், ஆனா எங்களுக்கு ஒரு மருத்துவ செக்கப்கூட செய்யல, அவங்களுக்கு என். 95 மாஸ்க், எங்களுக்கு நார்மல் மாஸ்க். அதையாவது ஒழுங்கா தராங்களா? இல்லையே. ஒரு டம்ளர் கபசுரக் குடிநீர்கூட கொடுக்கல. முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அதையாவது கொடுக்கச் சொல்லுங்க சார்'' என்றார்.

இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் பே.பெலிக்ஸ், "இங்கே கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன, மருத்துவமனையிலும், சாலை ஓர குப்பைகளையும் அகற்றி கிருமிநாசினி தெளித்து வரும் இவர்களே நிஜ தெய்வங்கள். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வீசும் இந்த குப்பைகளை தரம்பிரித்து அகற்றும் பணியில் ஈடுபடும்போது பொதுவாகவே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இவர்களுக்கு கரோனா நேரத்தில் மட்டுமல்லாது எப்போதுமே கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளை வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
 

சென்னை கார்ப்பரேஷன் ஹெல்த் செகரட்டரி செந்தில்நாதனோ இதுதொடர்பாக பேச மறுத்துவிட்டார். அரசு அனைவருக்கும் மாஸ்க், கைகழுவ கிருமிநாசினி கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால் அவர்களுக்குச் சென்று சேர்வதில்லை. இதற்கான டெண்டர் அமைச்சர் வேலுமணியின் மச்சான் கையில் உள்ளது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கண்டும் காணாமல் செல்கிறார். அதனால்தான் அனைவருக்கும் இந்த பாதுகாப்பு சாதனங்கள் கிடைப்பதில்லை என்கிறார்கள் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள்.

அழுக்கு சென்னையை, அழகு சென்னையாக மாற்றும் இந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
 

படங்கள்: ஸ்டாலின்
 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.