Skip to main content

ஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது' என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பூடகமாகவே பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

"சினிமாக்காரர்களை கூத்தாடிகள்' என விமர்சிப்பவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, ரஜினியின் "பாபா' பட விவகாரத்தின்போது ரஜினிக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் இது. அந்த விமர்சனத்தின் மீது அழுத்தமான நம்பிக்கையை ஆழமாக வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது ரஜினிக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை.

 

rajini



"பத்திரிகையாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாகவே பதில் சொல்லிப் பழக்கப்பட்ட ராமதாசிடம் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்களுக்கு ரஜினியுடனான அன்புமணியின் நெருக்கமும் கூட்டணி முயற்சிகளும்தான் காரணம்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

ராமதாஸ், ரஜினி, எடப்பாடியைச் சுற்றி அரசியலில் என்ன நடக்கிறது என மூன்று தரப்பிலும் விசாரித்தோம். பா.ம.க. வின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, ""நேரடி அரசியலுக்கு ரஜினி வராமல் போனால் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக களத்தில் நிற்கும். அப்படிப்பட்ட சூழல் உருவானால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உண்டு என சில கணக்குகளை ராமதாசிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

 

pmk



தி.மு.க.வை தனது எதிரியாக நினைக்கும் ராமதாஸ், என்ன விலை கொடுத்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருகிறார். அதற்குப் பல கணக்குகளும் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இந்தமுறை பா.ம.க. பங்குபெறாமல் போனால் அப்படி ஒரு வாய்ப்பு எப்போது வாய்க்கும் என தெரியாது. அதனாலேயே, அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது பா.ம.க. தலைமை. அதில் ஒன்றுதான் ரஜினி.

அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி என ராமதாசுக்கும் அன்புமணிக்கும் சொல்லப்பட்டுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பதை விரும்பும் அன்புமணி, பா.ம.க. -ரஜினி -பா.ஜ.க. என ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியை சந்தித்து விவாதித்திருக்கிறார் அன்புமணி. அந்த வகையில்தான், ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை ராமதாஸ் தவிர்ப்பதுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னலும் ரகசியமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய பா.ம.க.வின் வடதமிழக மூத்த நிர்வாகிகள்.

 

pmk



ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் விசாரித்தபோது,’ சென்னை -கேளம்பாக்கத்திலுள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அந்த சந்திப்பில், "நேரடி அரசியலுக்கு நீங்கள் வருவதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றம் நடக்கும். நாங்களும் நீங்களும் கூட்டணியாக இணைந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தர முடியும்' என அன்புமணி சொல்ல, அதனை ஆமோதித்த ரஜினி, "அய்யா ராமதாசின் போராட்டங்களை நிறைய படித்திருக்கிறேன். சமூக நீதிக்கான போராட்டங்களில் அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரை விட்டால் இப்போது தமிழகத்தில் மூத்த சமூகப் போராளி யாருமில்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது பற்றி நிறைய விவாதிக்கலாம்' என சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பையடுத்து ரஜினி-அன்புமணி யின் நட்பு இறுகியிருக்கிறது. பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பதில் ரஜினியும் விருப்ப மாகத்தான் இருக்கிறார். காரணம், பா.ஜ.க.வின் செயல் திட்டங்களுக்கேற்ப தி.மு.க.வை எதிரியாக கருதும் ரஜினி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு வதுதான். இதற்கான பல புள்ளிவிபரங்கள் ரஜினியிடம் தரப்பட்டிருக்கின்றன'' என்கிறார்கள் அழுத்தமாக.


இந்த நிலையில், ரஜினி-பா.ம.க. உறவு குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறை உறுதி செய்தது. இது குறித்து தனது தரப்பிலிருந்து ராமதாசிடம் பேச, "அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நமது கூட்டணி தொடரும். பா.ம.க.வை சந்தேகப் பட வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பா.ம.க. மீதான தனது சந்தேகத்தை எடப்பாடி விலக்கிக்கொள்ள வில்லை'' என்கிறார்கள் மூத்த அமைச்சர் களுக்கு நெருக்கமானவர்கள்.


பா.ஜ.க.வின் அரசியல் ஆலோசகர்களி டம் இது குறித்து விசாரித்தபோது, ""பா.ம.க.வில் அதிகரித்துவரும் அதிருப்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேற தருணம் பார்க்கிறார்கள். இத்தகைய அதிருப்தியாளர் கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்குள் போக விரும்பு வதில்லை. ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அங்கு சென்றால் நல்ல பதவிகள் வாங்க முடியும் என எதிர் பார்த்திருக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக வும், அ.தி.மு.க.விடம் சீட் சேரிங்கை அதிகரித்துக்கொள்ளவும்தான் ரஜினியும் பா.ம.க.வும் நெருங்குவது போல தோற்றத்தை உருவாக்குகிறது பா.ம.க. தலைமை''‘என சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்த ரஜினியை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பலே பலே திட்டங்களைப் போடத் துவங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.

 

 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.