Skip to main content

பாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சாமியார்கள் என்ற முகமூடி இருந்தால் போதும். சர்வசாதாரணமாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தலாம். உயிர்களைப் பறித்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று சட்டத்துறை அறிஞர்களே பதற்றம் அடையும் நிலையை பாஜக ஏற்கெனவே செய்துகாட்டியது.
 

N I A BJP


ஏற்கெனவே, நீதித்துறையை பாஜக கைப்பற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக அச்சப்படும் நிலையில் அப்படி என்ன செய்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி பிறகு பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து அந்த தாக்குதலை விசாரிக்க சிறப்பு அதிகாரங்களுடன் என்ஐஏ என்ற புதிய அமைப்பை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு உருவாக்கியது. அந்த அமைப்பு மும்பைத் தாக்குதலை மட்டுமின்றி, இந்தியாவுக்குள் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலையும் விசாரிக்கத் தொடங்கியது.

இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று கருதி விசாரணை நடத்தப்பட்ட பல வழக்குகளில் இந்துச் சாமியார்கள்தான் சிக்கினார்கள். இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்தி மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வோம்.

ஏற்கெனவே என்ஐஏ விசாரித்து முடித்த வழக்குகளில் இருந்து பல சாமியார்களை பாஜக அரசு விடுவித்திருக்கிறது. விடுதலையாகாத பிரக்யா என்ற பெண் சாமியாரை மக்களவை உறுப்பினராகவே ஆக்கியிருக்கிறது பாஜக. இப்படிப்பட்ட நிலையில் என்ஐஏவிற்கு ஏன் கூடுதல் அதிகாரம் கொடுக்கிறது பாஜக?
 

N I A BJP


பாஜகவின் நோக்கத்தை சந்தேகம் எழுப்பி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்ப்பை மீறி பாஜக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீதும், இந்திய சொத்துக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதர்களை கடத்தும் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்திருக்கிறது.

இந்தச் சட்டத்திருத்தம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மிரட்டும் வகையிலும் அரசுக்கு எதிரானவர்களை மிரட்டும் வகையிலும் செய்யப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்தியா முழுவதும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்தவும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் இந்தச் சட்டத்திருத்தம் பாஜகவுக்கு உதவியாக அமைந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். அவருடைய உறுதியை எந்தளவுக்கு நம்பலாம் என்பதை ஏற்கெனவே நாட்டு மக்கள் நன்றாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆட்சிக் காலத்தில் என்ஐஏவை எப்படி பாஜக அரசு தனது இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்தது என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாமா?

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட, சாமியார் அசிமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்த இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர்.
  N I A BJP


இந்த நிகழ்வை விசாரித்த சிபிஐ, இஸ்லாமியர்கள் பலரை கைது செய்து பல மாதங்கள் காவலில் வைத்தது. முடிவில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் முந்தைய பல குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அசிமானந்தா என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்தவர் நப குமார் சர்க்கார். பாட்டனி படித்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சிபெற்றவர். தனது பெயரை அசிமானந்தா என்று மாற்றிக்கொண்டு, தன்னை ஒரு சாமியார் என்றும் அறிவித்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் மலேகான் தர்கா, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்கா, பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் இவர் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை பல இடங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

குண்டுவெடிப்புகள் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது எழும் சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர் இஸ்லாமியர்கள் சிலரை கைது செய்து விசாரணை நடத்தியது.
 

NIA BJP


2006 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, மகாராஸ்டிரா மாநிலம் மாலேகானில் பள்ளிவாசல் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி நள்ளிரவு டில்லியிலிருந்து லாகூர் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 64 பேர் பலியாகினர்.

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர்.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அஜ்மீரில் உள்ள தர்காவில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பிரசாரக் சுனில் ஜோஷி மத்தியப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார். மாலேகான், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான பெண் சாமியார் பிரக்யாவுக்கு வேண்டியவரான இவர், அவரிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதால் கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் மாலேகானில் 3 குண்டுகள் வெடித்து 7 பேர் பலியாகினர்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய இரவு கோவா மாநிலத்தில் உள்ள பானாஜியில் குண்டுவெடித்து ஒருவர் பலியானார். நரகாசுரன் விழாவில் கூடியிருந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இஸ்லாமிய பயங்கவாதிகளை சந்தேகித்த போலீஸ், பின்னர், சனாதன் சன்ஸதா என்ற இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தது.
  NIA BJP


2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அரசு அமைத்த பின்னர், என்ஐஏ இணையதளத்தில் இந்துப் பயங்கரவாதம் என்ற தலைப்பில் இருந்த வழக்குகள், இதர குழுக்கள் என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து, இந்துப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் மிரட்டப்படுவதாக, சிறப்பு மத்திய அரசு வழக்கறிஞரான ரோஹினி சாலியன் பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில்தான், பாஜக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக என்ஐஏவை பயன்படுத்தி வழக்குகளை சீர்குலைக்கும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் இப்படிக் கருத்துக் கூறி இரண்டே வாரங்களில், சுனில் ஜோஷி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்சாமியார் பிரக்யாவை தேவாஸ் நீதிமன்றம் விடுவித்தது. அதைத்தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் பிரக்யா மற்றும் 5 இந்து பயங்கரவாதிகளை என்ஐஏ விடுவித்தது. அதுபோல, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளிலும் பல சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதாவது 9 வழக்குகளில் 4 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, மூவர் தவிர அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். ஒரு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் முடித்து வைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 4 வழக்குகளின் கதி என்னவென்று யூகிக்க முடியாதா என்ன?

 

 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.