Skip to main content

முதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால் வாய்களையும் பாதுகாக்க வேண்டுமென முதல்வர் மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருப்பவரின் மகனே வடிகால்வாயை ஆக்கிரமித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மீஞ்சூர் - திருவொற்றியூர் 100 அடி சாலை அருகே, தமிழக தொழில் மற்றும் ஊரகத்துறை அமைச்சர் பெஞ்சமின் மனைவி, மகன் விஜய்பெரிலினுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அங்கு பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருகிறது.

 

admk



சாலைக்கும் அமைச்சரின் இடத்திற்கும் இடையே 30 அடியில் ஓடைநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது வணிக வளாகம் கட்ட ஆரம்பித்தார் விஜய்பெர்லின். அமைச்சரின் மகன் என்று முதலில் பொதுமக்கள் இதை எதிர்க்க தயங்கினர். ஆனாலும் இதனால் பின்னால் ஏற்படப்போகும் விபரீதங்களை உணர்ந்து, இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சட்டத்திற்கு புறம்பாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டுவிட்டு, போராட்டம் நடத்திய இளைஞர்களை இரவோடு இரவாக வீடுபுகுந்து கைது செய்துள்ளது காவல்துறை.

 

admk



இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவரான சி.பி. எம். கட்சி பிரமுகர் கோபால், "நீர்நிலைகளை பாதுகாக்கணும்னு முதல்வர் சொல்றாரு. ஆனா, அதே கட்சி அமைச்சர் மகனே மழைநீர் கால்வாய் மீது வணிக வளாகம் கட்டுகிறார். எதிர்த்துக் கேட்டா ஜெயில்ல போடுறாங்க. வேம்பாக்கத்துல இருந்து எங்கஊர் வழியா கொக்குமேடு ஏரிக்கு முப்பது அடி அகல மழைநீர் கால்வாய் போகுது. அதை ஒட்டியே தடப்பெரும்பாக்கத்துல அமைச்சர் பெஞ்சமின் மனைவி ஷீலா மற்றும் மகன் விஜய்பெர்லின் பெயருல இடம் இருக்கு’’ என்று ஆவணத்தைக் காட்டினார்.

 

admk



மேலும், "அதுல பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருது. இப்போ அதுக்கு பக்கத்துல இந்த மழைநீர் கால்வாய் ஓடுது. அது மேல கட்டிடம் கட்டுறார். அதை பொதுமக்கள் எதிர்த்தாங்க. அப்போ அங்க வந்த பொன்னேரி காவல் ஆய்வாளர் பால்ராஜ் எல்லோரையும் சமாதானப் படுத்தி வேலையை நிறுத்தினார். ஆனா, அடுத்தநாளே கட்டுமான வேலைய துவங்கினாங்க. கட்டுமான வேலையை நிறுத்தச்சொல்லி மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தினாங்க. அதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அனுமதியோடத்தான் கட்டுமான வேலை நடக்குதுன்னு சொன்னாங்க.

வருவாய்த்துறைக்கு சம்பந்தப்பட்ட இடத்துல அதுவும் நீர்ப்பிடிப்பு பகுதியில யாரும் கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டாங்க. அப்படியிருக்கும்போது இங்கே கட்டுமானம் அமைக்க யார் அனுமதி வழங்கியதுன்னு கேட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டமும் நடத்துனோம். தாசில்தார் மணிகண்டன் காலில் விழுந்தும் மக்கள் போராடினாங்க. அப்படியும் கொஞ்சம்கூட அவர் மனமிரங்கல.


அன்று இரவு ஒன்றரை மணிக்கு, போராட்டம் நடத்திய இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மதன் மற்றும் பாலாஜியை வீடு புகுந்து போலீசார் கைது செய்து கூட்டிட்டுப் போனாங்க. பொன்னேரி காவல் நிலையத்துக்கு போய் பார்த்தா அவுங்க அங்க இல்ல. மறுநாள் காலை வரைக்கும் எங்க தேடியும் கிடைக்கல. மத்தியானத்துக்கு மேலதான் திருப்பாலைவனம் போலீஸ் ஸ்டேசன்ல இருக்குறதை கண்டுபிடிச்சோம். திரும்பவும் மக்கள் அங்க கூடி போராட்டம் நடத்தியதால மதனையும், பாலாஜியையும் விடுவிச்சாங்க. அமைச்சரோட பவரைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டே வந்தவங்க, தற்போது கட்டுமான வேலையை நிறுத்தியிருக்காங்க'' என்றார்.


பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் இது குறித்து கேட்டபோது, "நான்தான் அங்கு நடந்த வேலையை நிறுத்தினேன். மற்ற படி இதுபற்றி ஆர்.டி.ஓ. நந்தகுமார் சார்கிட்ட தான் நீங்க பேசணும்''’என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

பொன்னேரி ஆய்வாளர் பால்ராஜிடம் நாம் பேசியபோது, "தேவையில்லாம கூட்டம் சேர்த்தாங்க. அதனால்தான் கைது செய்தோம்''’என்றார். "போராட் டத்தின்போதே கைது செய்யாமல், ஏன் நள்ளிரவு ஒரு மணிக்கு தீவிரவாதி போல கைது செய்தீர்கள்' என்று கேட்டதும், எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்து விட்டார். தொடர் முயற்சிக்கு பின்னர் இதுகுறித்து நம்மிடம் பேசினார் அமைச்சர் பெஞ்சமின். அவர், "அந்த இடம் என் மகன் விஜய்பெர்லினுக்கு சொந்தமானது. முறையான அனுமதி வாங்கி கட்டினோம். ஆனா லோக்கல்ல அ.ம.மு.க. கட்சி பிரமுகர் பாலாஜி என்பவர் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். என் மகன் தர மறுத்ததால் போராட் டம் நடத்தி என் பெயரை கெடுக்கப் பார்த்தார்கள். புகாரின் பெயரில் போலீசார் கைது செய் தாங்க. புகாரை வாபஸ் வாங்கியதால அவரை விடுவிச்சாங்க... அவ்வளவு தாங்க''’’என்று முடித்துக்கொண்டார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பாலாஜியிடம் கேட்டபோது, "இது அப்பட்டமான பொய். அமைச்சர்ங்கிற பவர்ல அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் மட்டுமா போராடினேன். ஊர் மக்களே போராடினாங்க. எல்லாத்துக்கும் விரைவில் விடிவுகாலம் வரும்' என்றார் ஆதங்கத்துடன்.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.