
ஹோட்டல்களில் உணவுப் பொருள்களுக்கு விலை பட்டியல் போட்டிருப்பது போல், எப்ஐஆர் போடவும், கைது செய்யவும், தலைமறைவாக இருக்க வைக்கவும் என பட்டியல் போட்டு கல்லா கட்டி வருகிறது சேலம் போலீஸ்.
சேலம் மாவட்டம் சங்ககிரி சப்- டிவிஷனுக்கு உட்பட்ட கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இதே காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ விக்னேஷ்வரமூர்த்தி, எஸ்ஐ செந்தில்குமரன், எஸ்.எஸ்.ஐ மயில் கணேசன் ஆகியோர் இன்ஸ்பெக்டருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, பட்டியல் போட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலானது.

இதுகுறித்து, நக்கீரன் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின... ''கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, உள்ளூரைச் சேர்ந்த திமுக, அதிமுக பிரமுகர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டனர். நில அபகரிப்பு கும்பலிடம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, எஸ்.ஐ செந்தில்குமரன் ஆகியோர் 6 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு, சொக்கலிங்கத்தின் மீது அடுத்தடுத்து 3 முறை சாதி வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்து முடக்கிப் போட்டுள்ளனர். மாற்று சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதால் அவர்கள் மீது, பட்டியல் சமூகத்தினர் யாரையாவது தூண்டிவிட்டு, சாதி வன்கொடுமை புகார் கொடுக்க வைக்கின்றனர். வன்கொடுமை வழக்கு பாயாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய், ஜாமின் பெறும் வரை அவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் என பட்டியல் போட்டு பணம் கறக்கின்றனர்.

கொங்கணாபுரம் காவல் எல்லைக்குள், சட்ட விரோதமாக 48 சந்துக்கடைகள் இயங்கி வருகின்றன. சந்து கடைக்காரர்கள் மாதம் தலா 5000 ரூபாய் கப்பம் கட்டுவதால் அவர்கள் மீது காக்கிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், கொங்கணாபுரம் பகுதியில் 9 டாஸ்மாக் கடைகள், 6 டாஸ்மாக் பார்கள். இந்த கடைகளிலும் மாதம் தலா 10,000 ரூபாய் கறந்து விடுகின்றனர். இந்த லிமிட்டில் 115 பனை மரங்கள் உள்ளன. சீசன் காலத்தில் கள் வியாபாரிகளிடம் வாரம் 2000 ரூபாய் மாமூல் இறக்கி விடுகிறார்கள். கரண்ட் பேப்பர்களை விசாரித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய ரூ.1 லட்சமும், சொத்து ஆவணங்கள் மாயமான புகார்கள் மீது நடவடிக்க எடுக்க 50,000 ரூபாயும் வசூலிக்கின்றனர். சமீபத்தில் ஒரு பஞ்சு குடோன் தீப்பற்றி எறிந்த சம்பவத்தில் சேத மதிப்பை அதிகப்படுத்தி வழக்குப்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் கைமாறி இருக்கிறது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி நேரடியாக எங்கும் கை நீட்டுவதில்லை என்றும், எஸ்.ஐ.க்கள் விக்னேஷ்வரமூர்த்தி, செந்தில்குமரன், 'கரண்ட் பேப்பர்' மயில் கணேசன் ஆகியோர் தான் வசூல் ஏஜன்டுகளாகவும் வலம் வருகின்றனர். கொங்கணாபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில்தான் எல்லா டீலிங்கும் நடக்கிறது,'' என்கிறார்கள் கொங்கணாபுரம் காக்கிகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் குறித்து மற்றொரு தரப்பினரும் விரிவாகச் சொன்னார்கள்...“இந்த காவல் நிலையத்தில், ஆர்த்தி என்பவர் பயிற்சி பெண் எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்தார். கச்சுப்பள்ளியில் நடந்த சாதி மோதல் தொடர்பான ஒரு வழக்கை அவர் விசாரித்தார். சம்பவத்தின் அடிப்படையில் அந்த வழக்கில் கையால் தாக்கியது, ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஆனால், ஒரு தரப்புக்கு ஆதரவாக, எதிர் தரப்பு மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி இன்ஸ்பெக்டர் அழுத்தம் கொடுத்தார். அதற்கு எஸ்.ஐ ஆர்த்தி உடன் படாததால், இருவருக்கும் அங்கேயே முட்டிக்கொண்டது. அடுத்து, திவ்யா என்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமான வழக்கிற்காக ஆர்த்தி எஸ்.ஐ பெங்களூரு சென்று ஆதார் தரவு மையத்தின் மூலம் சில முக்கிய தகவல்களைப் பெற்றார். அந்த வகையில், 10,000 ரூபாய் அவர் சொந்தப் பணத்தை செலவு செய்தார்.
இந்தப் பணத்தை கிளெய்ம் செய்யக் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் தனலட்சுமியோ, 'என் பெயரைச் சொல்லி எவ்வளவோ சம்பாதிச்சிருப்ப. அதுல கழிச்சுக்கோ,' என நக்கலாகச் சீண்டிப் பார்க்க, அதற்கு எஸ்ஐ ஆர்த்தியோ, 'எங்களை பயன்படுத்தி நீங்கதான் கல்லா கட்டுறீங்க மேடம்,' என வார்த்தையால் என்கவுண்ட்டர் செய்திருக்கிறார். இந்த இரு சம்பவத்திற்குப் பிறகு, அந்த எஸ்.ஐயை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி. இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு, அபிமன்னன் என்பவருக்குச் சொந்தமான லாரி காணாமல் போனது. இந்த வழக்கை விசாரிக்க எஸ்.ஐ ஆர்த்தி பணம் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ செந்தில்குமரன், ஒரு புகாரை எழுதிக் கொடுத்து, அதில் கையெழுத்துப் போடும்படி அபிமன்னனுக்கு அழுத்தம் தந்திருக்கிறார். ஆனால் அபிமன்னனோ, 'எனக்கு லாரியே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. பொய் புகார் தர முடியாது,' என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ செந்தில்குமரன், 'ஏன் நீயும், அந்த எஸ்.ஐ.யும் எங்கேயாவது ஜாலியாக ரூம் போடலாம்னு இருக்கீங்களா? ஏன் புகார் தர மாட்டேன்கிறாய்?,' என ஆபாசமாக பேசியிருக்கிறார்.

எஸ்.ஐ செந்தில்குமரன், பயிற்சி பெண் எஸ்.ஐ மீது பாய்வதற்கு பின்னணி குறித்து விசாரித்தோம்... செந்தில்குமரன் புரமோஷன் மூலம் எஸ்.ஐ., ஆனவர். சீனியர் என்றாலும், வருகை பதிவேட்டில் நேரடி எஸ்.ஐ.,யான ஆர்த்தியின் பெயருக்குக் கீழ் செந்தில்குமரன் பெயர் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. தன் பெயரை நேரடி எஸ்ஐயின் பெயருக்கு மேலே எழுத வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். மேலும், அவரை தனக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார். புரோட்டோகால் படி நேரடி எஸ்.ஐ, புரமோஷன் எஸ்.ஐக்கு சல்யூட் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூற, அதனால் ஏற்பட்ட ஈகோவினால் பயிற்சி பெண் எஸ்.ஐ.க்கு களங்கம் ஏற்படுத்த முயறசி செய்திருக்கிறார் செந்தில்குமரன். இவரும், எஸ்.ஐ., விக்னேஷ்வரமூர்த்தியும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே பெண் எஸ்.ஐ.யை சாதாரண காவலர் போல நடத்தி அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, எஸ்.ஐ., விக்னேஸ்வரமூர்த்தி, அவருடைய ஜி.டி. குறிப்பேட்டில் பதிவான சில சென்சிடிவ் புகார்களை எஸ்.ஐ., ஆர்த்தி தலையில் திணித்து சிக்கலில் மாட்டிவிடப் பார்த்தார் என்றும் சொல்கிறார்கள். மேலும், அவரிடம் தவறான உடல்மொழியைக் காட்டி மன உளைச்சலையும் ஏற்படுத்தினாராம். மற்றவர்கள் பட்டியல் போட்டு கறாராக மாமூல் வேட்டையாடும்போது எஸ்ஐ ஆர்த்தி, 'கொடுப்பதை' வாங்கிக் கொள்வார். யாரையும் வற்புறுத்த மாட்டார் என்கிறார்கள் சிலர். அதனால் புகார்தாரர்கள் மத்தியில் அவர் மீது நல்ல அபிப்ராயம் உண்டு. இவரால் இன்ஸ்., தனலட்சுமி மற்றும் எஸ்ஐக்களுக்கு பல லட்சம் ரூபாய் மாமூல் வசூல் பாதிக்கப்பட்டது. அதனால் கடுப்பான இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, எஸ்.ஐ ஆர்த்தி மீது எஸ்.பிக்கு பொய் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், எஸ்ஐ ஆர்த்தியிடம் விளக்கம் கேட்டு, எஸ்.பி கவுதம் கோயல் நோட்டீஸ் அளித்துள்ளார். இதற்கிடையே, கடந்த மே மாதம் இறுதியில், எஸ்.ஐ ஆர்த்தி, கொங்கணாபுரத்தில் இருந்து ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்,'' என கொங்கணாபுரம் காக்கிகளின் அட்ராசிட்டிகளை புட்டு புட்டு வைத்தனர் விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமியிடம் விளக்கம் கேட்டபோது, “அரசாங்கம் எனக்கு வழங்கிய ஜீப் பழுதாகிவிட்டது. அதை சரி செய்ய 40 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. அதற்கே நான் சொந்தப் பணத்தைதான் செலவு செய்தேன். வழக்கு ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்குக் கூட நான் கைக்காசைதான் செலவழிக்கிறேன். எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வருகிறது. அதுவே போதும். நான் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும்? எஸ்.ஐ., ஆர்த்திக்கு டூட்டி போடும்போது அந்த டூட்டி பார்க்க மாட்டேன்... இந்த டூட்டி பார்க்க மாட்டேன் என்றும், மன உளைச்சலில் இருப்பதாகவும் சொன்னார். சார்... எனக்கு வேறு லைனில் அழைப்புகள் வந்துகிட்டே இருக்கு. அப்புறமா பேசுகிறேன்,'' என்று கூறிவிட்டு பேச்சைத் துண்டித்தார்.
இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்பது போல பேசினாலும், காவல்துறைக்குள் அவரை 'வசூல் ராணி' என்றே சொல்கிறார்கள். அவர் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, மாமூல் கேட்ட புகாரின்பேரில், அவருக்கு இரண்டு இன்கிரிமென்ட்டை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.
எஸ்ஐ ஆரத்தியிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருபோதும் மறுத்ததில்லை. ஒருமுறை தொடர்ச்சியாக பணியாற்ற நேர்ந்ததால், ஓய்வுக்காக விடுப்பு கேட்டேன். விடுப்பு கிடைக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டது. அதை வேறு மாதிரி திசை திருப்பி விட்டனர். இதற்கு மேல் பேச விரும்பவில்லை,'' என்றார் சுருக்கமாக.
புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில்லை என்பதால்தான், பொதுமக்கள் கலெக்டர், கமிஷனர், எஸ்பி, முதல்வர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகின்றனர். காவல்நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாக மாறி வருவதை, டிஜிபி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.