Skip to main content

'உயிரை உலுக்கிய 24 நொடி'-வீடியோவை பதிவு செய்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Published on 17/06/2025 | Edited on 17/06/2025
Tragedy befalls boy who recorded '24 seconds that shook his life'

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் கடந்த 12.06.2025 அன்று மதியம் லண்டன் கேட்விக் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்ஜின் செயல் இழப்பால் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் வசித்தவர்கள் என சுமார் 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக முதற்கட்டமாக செய்திகள் ஊடங்களில் வெளியானபோது மொட்டை மாடியில் இருந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. இந்த வீடியோ முக்கியமான ஒன்றாகவும் விசாரணைக்கு இருந்துள்ளது.

அந்த வீடியோவை எடுத்தது ஒரு சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் ஆர்யன்(17). பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆர்யனின் தந்தை சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக பணியில் சேர்ந்துள்ளார். குடும்பத்தினரை சொந்த ஊரான ஆரவல்லியில் விட்டுவிட்டு தந்தை மட்டும் மெஹானி பகுதியில் வீடு எடுத்து வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் ஆர்யன் 11 ஆம் வகுப்பு தேர்வை முடித்துவிட்டு விடுமுறைக்காக தந்தையை பார்க்க தன்னுடைய சகோதரியுடன் கடந்த 12  ஆம் தேதி முதல்முறையாக அகமதாபாத் வந்துள்ளார். வீட்டுக்கு அருகிலேயே விமான நிலையம் இருப்பதால் விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்படுவதை பார்த்து உற்சாகமடைந்த ஆர்யன் விமானங்கள் செல்வதை வீடியோ எடுக்கலாம் என்ற ஆர்வத்துடன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

Tragedy befalls boy who recorded '24 seconds that shook his life'

அப்பொழுது விபத்தில் சிக்குவதற்கு முன்பாக ஏர் இந்தியா விமானமானது பறந்து சென்றுள்ளது. அதை தன்னுடைய செல்போனில் சிறுவன் ஆர்யன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென விமானம் கீழ்நோக்கி இறங்கியது. விமான கீழே தரையிறங்குகிறது என நினைத்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்திலேயே விமானம் விழுந்து தீப்பிழம்பு வெளிப்பட்டது. பதற்றமடைந்த சிறுவன் தான் எடுத்த அந்த வீடியோவை சகோதரியிடம் காட்டியுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய இந்த விபத்தில் முதன் முதலில் வெளியானது 24 நொடிகள் கொண்ட இந்த  வீடியோ என்பது குறிப்பிடத்தகுந்தது. விபத்தை நேரில் பார்த்த சிறுவன் ஆர்யன் கடுமையான மன உளைச்சலில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்திற்கு முன்னதாகவே வீடியோ பதிவு செய்யப்பட்டதால் திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்