Skip to main content

தனுஷுக்கு இன்னொரு அவார்ட் பார்சல்..! - ‘குபேரா’ விமர்சனம்! 

Published on 20/06/2025 | Edited on 20/06/2025

 

Kuberaa movie review

வாத்தி படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அடி எடுத்த வைத்த நடிகர் தனுஷ் இந்த முறை குபேரா படம் மூலம் தன் கால் தடத்தை அழுத்தமாகப் பதிய முயற்சி செய்து இருக்கிறார். வாத்தி திரைப்படம் கலையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது இந்த குபேரா மூலம் முழுக்க முழுக்க வெற்றி மட்டுமே கொடுக்கும் முயற்சியில் களம் இறங்கி இருக்கும் தனுஷ் மற்றும் குபேரா எந்த அளவு வரவேற்பைப் பெற்றார்கள்..?.

ஆழ்கடலில் பெருமளவில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் வில்லன் ஜிம் சர்ப். அதன் முழு உரிமையையும் தன் வசமாக மாற்ற மத்திய மந்திரிக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கிறார். லஞ்சப் பணமான ஒரு லட்சம் கோடியை அரசாங்கத்திற்கு தெரியாமல் பல்வேறு மந்திரிகளுக்குப் பிரித்தளிக்கும் வேலையை வில்லன் ஜிம் சர்ப் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் சிபிஐ ஆபீஸர் நாகார்ஜுனாவை மூளைச் சலவை செய்து கெட்டவராக மாற்றி அவரை ஜெயிலில் இருந்து வெளியே எடுத்து அவர் மூலம் அந்த பணத்தைப் பிரித்து அளிக்கும் வேலையை ஆரம்பிக்கிறார். இதற்காக நான்கு பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் தனுஷின் ஒருவர். இவர்களைப் பினாமியாக மாற்றி அந்த பணத்தை சுவிஸ் பேங்கில் போட்டு பின்பு அதை வெள்ளையாக மாற்றி இந்தியாவிற்குக் கொண்டு வந்து அதைப் பகிர்ந்து அளிக்கின்றனர். இதற்கிடையே நான்கு பிச்சைக்காரர்களும் அவர்களுக்கான வேலையை முடித்தவுடன் அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்து விடுகின்றனர்.

இந்த விஷயம் பிச்சைக்காரரான தனுஷுக்கு தெரிய வர அவர் இந்த ஜிம் சர்ப் மற்றும் நாகார்ஜுனா அண்ட் கோ விடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். வில்லன் குரூப் அனைவரும் தனுசை வலை வீசி தேடுகின்றனர். தப்பி ஓடும் தனுசுக்கு ராஸ்மிகா மந்தானா அடைக்கலம் கொடுத்து அவரை காப்பாற்ற அவருடன் சேர்ந்த திட்டம் தீட்டுகிறார். இதையடுத்து வில்லன் குரூப்புகளிடம் தனுஷ் அண்ட் ராஷ்மிகா மந்தானா சிக்கினார்களா, இல்லையா? வில்லன் குரூப்ஸ் ஏன் தனுஷை விரட்டுகின்றனர்? பினாமி தனுஷ் இறுதியில் என்ன ஆனார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.

பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் தன் பேராசையால் எப்படி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி நாட்டை ஊழல் மூலம் சுரண்டுகின்றனர் என்ற கரண்ட் ட்ரெண்டில் இருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சேகர் கமுலா அதை ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரம் மூலம் பரபர திரைக்கதையோடு உணர்ச்சி பொங்க எமோஷனல் டிராமாவாக திரில்லிங்கான படத்தை இந்த குபேரா மூலம் கொடுத்து வெற்றி அரியணையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.

முதல் பாதியில் கார்ப்பரேட் முதலில் செய்யும் ஊழல், அதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, பின்பு சிபிஐ அதிகாரியை மூளைச் சலவை செய்து தவறு செய்ய வைப்பது, பிச்சைக்கார தனுஷை தேர்வு செய்து அவருக்கு ட்ரெய்னிங் அளிப்பது எனத் திரைக்கதையை வேகமாகக் கொடுக்க கச்சிதமான மேக்கிங் கை கொடுத்துப் பரபரப்பாக எதார்த்த காட்சிகளோடு செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் நாயகி ராஷ்மிகா மந்தானா உடன் ஓடிக்கொண்டே இருக்கும் தனுஷ், இவரைத் துரத்தும் வில்லன் குரூப்ஸ், இன்னொரு பக்கம் இவர்கள் இருவருக்கு நடுவே மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் நாகார்ஜுனா போன்ற விஷயங்களை இரண்டாம் பாதி முழுவதும் ரிப்பீட் அடித்துப் போகப்போக அதுவே சற்று வேகத்தடையாக மாறி கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தத்துவ பாடல், ஹீரோயிசம், கமர்சியல் சண்டைக் காட்சிகள் எனப் படம் கமர்சியல் ஜோனுக்கு சென்று சற்றே ஏமாற்றம் அளிக்கும் படியாக எதார்த்தத்தைத் தாண்டிய லாஜிக் மீறல்கள் உடன் கூடிய வழக்கமான படமாக மாறி முடிந்து இருக்கிறது.

இருந்தும் படம் முழுவதும் ஒரு சென்டிமென்ட் விஷயம் கதையோடு பயணிப்பது, அதற்கு ஏற்றார் போல் கதை மாந்தர்களின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு என ஆத்மார்த்தமான எதார்த்த விஷயங்கள் திரைக்கதையோடு ஒன்றி வருவது இந்த சருக்கல்களை எல்லாம் கலைய செய்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. குறிப்பாக எமோஷனல் ஆன விஷயங்களும் பரபர திரைக்கதை மேக்கிங்கும் பல்வேறு பயிற்சிகளை மறக்கடிக்கச் செய்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வைக் கொடுத்து படத்தையும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.

ஒரு பிச்சைக்காரர் அப்படியே நம் கண் முன் கொண்டு வர முயற்சி செய்பவர்கள் தன் ஆடை வடிவமைப்பை மாற்றி உடலில் கருப்பு அழுக்கைப் பூசிக்கொண்டு அம்மா தாயே என்று அழைத்து அந்த நடிப்பின் மூலம் பிச்சைக்காரரை அப்படியே கண் முன் கொண்டு வர முயற்சி செய்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஓ பிச்சைக்காரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடை உடை பாவனை அழுக்கு ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி லட்சணமான முக அமைப்பு முடியை அழகாக வெட்டி அழகு செய்து கொண்டு நல்ல கோட்டு சூட்டு உடை அணிந்து கொண்டு இருந்தாலும் அதையும் மீறி இவர் ஒரு பிச்சைக்காரர் என்பதை தன் முகபாவனைகள் மற்றும் உடல் மொழி மூலம் நடிப்பு அரக்கனாக மாறி அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அடுத்த விருதுக்குத் தயாராகி இருக்கிறார் நடிப்பு அசுரன் தனுஷ். தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இந்த படத்திற்காகக் கொடுத்து நடிப்பில் தான் ஒரு ஜீனியஸ் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

பிச்சைக்கார வாழ்க்கை பணக்கார வாழ்க்கை பின்பு மீண்டும் பிச்சைக்காரருக்கான அத்தனை விஷயங்களையும் தன் நடிப்பின் மூலம் சரிவரக் கலவையில் சிறப்பாகக் கொடுத்துப் பார்ப்பவர்கள் கண்களைக் குலமாக்கும்படியான நடிப்பையும் கொடுத்து அதே சமயம் ஆங்காங்கே சில இடங்களில் சிரிப்பையும் வரவைத்து சில இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை நிறைவாகக் கொடுத்துப் பார்ப்பவர்களைக் கைதட்ட வைத்து அதன் மூலம் திரையரங்கை அதிரச் செய்து இருக்கிறார். படம் முழுவதும் ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் அந்த கதாபாத்திரமாகவே அப்படியே வாழ்ந்து நம்மையும் அசர அடித்திருக்கிறார்.

தனுசுக்கு அடுத்த விருது பார்சல்..! இவருடன் போட்டிப் போட்டுக் கொண்டு அனுபவம் நடிப்பை மிக மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாகார்ஜுனா. கிரே ஷேடில் வரும் இவரது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்து அதற்கு நியாயம் செய்திருக்கிறார். முதலில் நல்லவராக இருந்து பின் கெட்டவராக மாறி மீண்டும் குற்ற உணர்ச்சியால் இரு பக்கமும் சாய முடியாமல் நடுவே நிற்கும் கதாபாத்திரமாக மாறி பின்பு கடைசியில் வந்த இடத்திலேயே வந்து நின்று முடியும்படியான கதாபாத்திரத்தை ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாகக் கையாண்டு தன் அனுபவம் நடிப்பின் மூலம் மிளிர்கிறார் நாகார்ஜுனா. அப்பாவி பெண்மணியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தானா பெரிதாக மேக்கப் இல்லை காஸ்டியூம் இல்லை டான்ஸ் இல்லை பாடல்கள் இல்லை இருந்தாலும் அழகாக இருக்கிறார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இவருக்கும் தனுஷுக்குமான கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்து அழகான நடிப்பை இருவரும் மாறி மாறி கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். வில்லன்கள் ஜிம் சர்ப், ஹரிஷ் பெரோடி ஆகியோர் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். இவர்களின் வழக்கமான நடிப்பு படத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையவில்லை. மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் சாயாஜி சின்டே, அழகம்பெருமாள், சுனைனா உட்படப் பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்.

நிகேட் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவில் கார்ப்பரேட் உலகம் மும்பையின் இன்னொரு முகம் ஆகியவை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு படத்தையும் உலகத்தரம் வாய்ந்த படமாக மாற்றி இருக்கிறார். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. வழக்கமாக டமால் டுமீல் இசையில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் சற்றே அடக்கி வாசித்து இருக்கிறார். அது படத்திற்கும் ஏற்றவாறு அமைந்து சிறப்பான முறையில் படத்திற்குப் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது. போய் வா நண்பா பாடல் தியேட்டரில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. குறிப்பாகப் பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார் டி.எஸ்.பி.

இன்றைய ட்ரெண்டுக்கேற்ப கதையைத் தேர்வு செய்து அதற்கேற்றவாறு சிறப்பான மேகிங் மூலம் திரைக்கதை அமைத்து அதை வைத்து நீண்ட படமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் படத்தின் நீளத்தை மற்றும் சற்று 15 முதல் 20 நிமிடங்கள் குறைத்து இருந்தால் இந்த படம் இன்னமும் பெரும் வரவேற்பைப் பெற நிறைய வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி படம் பார்ப்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும்பாலும் குறை இல்லாத படி சிறப்பான நிறைவான எமோஷனலான படமாக இந்த படத்தைக் கொடுக்க முயற்சி செய்த இயக்குநர் அதில் வெற்றி பெற்று தனது காலரைத் தூக்கி விட்டுக் கொண்டுள்ளார் இயக்குநர் சேகர் கமுலா.

குபேரா - பரந்த மனசுக்காரன்!

சார்ந்த செய்திகள்