Skip to main content

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாக சபாநாயகர்! கர்நாடகா அரசியலில் பரபரப்பு! 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அமைத்து, பெரும்பான்மையையும் சாதுர்யமாக நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா. இது தேசிய அளவில் விவாதப்பொருளாகி, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என்கிற குரல்கள் வலிமையடைந்து வருகின்றன. குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க.வின் வலையில் விழுந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பி அதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களது ராஜினாமாவை ஏற்க மறுத்தார் சபாநாயகர். எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவை பதவி ஏற்காத நிலையில், ஜூலை 29 அன்று பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க, வாக்கெடுப்பு முடிந்ததும், சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

bjp



அதற்கு ஓரிருநாள் முன்னதாக, குமாரசாமி ஆட்சி கவிழ காரணமாக இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், மீதமிருந்த 14 பேரின் பதவியையும் கடந்த ஞாயிற்றுகிழமை பறித்தார். இதனால், "பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு சபாநாயகர் பணிந்துவிட்டார், பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டார்' என கர்நாடக அரசியலில் பரபரப்பு கிளம்பியது. இதனை மறுத்த, சபாநாயகர் ரமேஷ்குமார், "அரசியலமைப்பு சட்டத்தின்படி 17 பேரின் ராஜினாமாவை ஆய்வு செய்ததில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இவர்கள் தற்போதைய ஆட்சியின் காலம் முடியும்வரை (2023, மே மாதம் வரை) தேர்தலில் போட்டியிட முடியாது'' என அழுத்தமாகத் தெரிவித்தார்.

 

congress



17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்தது. இதன்படி பெரும்பான்மைக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் போதுமானது. அந்த வகையில் பா.ஜ.க.வின் 105 உறுப்பினர்களும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் என 106 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார் எடியூரப்பா. இந்த நிலையில்தான் கட்சித்தாவல் தடை சட்டத்தின் மீது சர்ச்சைகள் எழுந்துள்ளன. இச்சட்டம் குறித்து பல ஆய்வுகளை நடத்தியிருக்கும் பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான காசிநாதன், "கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், "மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கும்வரை அமைச்சர் பதவி ஏற்க முடியாது' என கட்சித்தாவல் தடை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியின் ஆயுள் காலம்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என எங்கும் சொல்லவில்லை. அப்படியிருக்கும் நிலையில்... ’"ஆட்சியின் காலம் முடியும்வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது'’என கர்நாடக சபாநாயகர் சொல்லியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தும்''‘என்கிறார்.

 

mjk



தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் அவர்களை இடைத்தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட அனுமதித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அப்படியிருக்கும் நிலையில், "ஆட்சிக் காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என கர்நாடக சபாநாயகரின் உத்தரவு, பல்வேறு கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸின் மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் நம்மிடம், "தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் தனபால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என சொல்லவில்லை. காரணம், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்பதால்தான் தகுதி நீக்கம் செய்ததைத் தாண்டி வேறு எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை. தேர்தல் ஆணையமும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. இப்படிப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஷரத்துகளை அறிந்துள்ள கர்நாடக சபாநாயகர், "போட்டியிட முடியாது' என சொல்லியிருப்பது புதிய அத்தியாயத் தையும் பல கேள்விகளையும் உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், "சபாநாயகரின் இந்த உத்தரவு செல்லுமா? செல்லாதா?' என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. ’"சபாநாயகரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. அவர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'’என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதால், சபாநாயகரின் இந்த உத்தரவு வலிமையடையலாம். அதேசமயம், கட்சித்தாவல் தடைச் சட்டம் மாநிலத் துக்கு மாநிலம் வெவ்வேறு கோணங்களில் பயன் படுத்தப்படுவதால் இச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. தகுதி நீக்கம் செய்யப் பட்டவர்களை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிப்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டமே பயனற்றதாகிறது. கட்சி தாவும் எம்.எல்.ஏ.க் களை தண்டிக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் ஒன்றுக் கொன்று முரண்பாடு இல்லாமல் திருத்தி அமைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சிக்கு துரோகம் செய்யாமல் இருப்பார்கள். ஜன நாயகம் காப்பற்றப்படுவதுடன் ஆட்சி கவிழ்ப்பும் நடக்காமல் இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக.

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.