
கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டி.ஆர். பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?. கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?.
பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் ‘உறங்குவது ஏன்?’ என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக சமூக வலைத்தளப்பிரிவின் (dmk it wing) பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?. நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?. தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?. இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?.
ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?. எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று பி.பி. ( BP) எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தொண்டர்கள் தெரிவித்தனர். ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த ஆர்.பி. உதயகுமார் கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே?. அவரை எது தடுக்கிறது?. என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?. இன்று கூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் ‘கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன்!” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.